புதுச்சேரி, மே 29–
சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் இருந்து புதுச்சேரி மாநிலம் வெளியேறியது.
புதுவைக்கு தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழ்நாட்டு பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது 1 முதல் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் இருந்து புதுச்சேரி மாநிலம் வெளியேறியது.
வரும் கல்வியாண்டு முதல், ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டு 1 முதல் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதால், தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் இருந்து புதுச்சேரி வெளியேறியது. இதனால் கட்டாய பாடமாக இருந்த தமிழ், இனி விருப்ப பாடமாக தேர்வு செய்யும் முறை கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக்கொள்கை
புதுச்சேரியில் இதுவரை 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாட்டுப் பாடத் திட்டத்தின்படி பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. 2015 க்கு பிறகு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் மட்டும் சிபிஎஸ்இ பாடத்திட்டமும் அதன்பிறகு தமிழ்நாட்டு பாடத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் வரும் 2023-24 ஆம் கல்வியாண்டு முதல் 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாணவர்கள் தங்களது விருப்ப மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் மொழியை விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்கலாம் என்றும், ஏனாமில் தெலுங்கு, மாஹேயில் மலையாள மொழியை விருப்ப பாடமாக 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.