அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்
சென்னை, செப்.15–
தமிழ்நாட்டிற்கு 2024–ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 7 லட்சத்து 24 ஆயிரத்து 318 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், 17 கோடியே 96 லட்சத்து 27 ஆயிரத்து 146 உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளார்கள் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில், சுற்றுலா ஆணையர் சி.சமயமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் சுற்றுலாத்துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த சிறப்பு நிலை அலுவலக உதவியாளர் எம்.செல்வராஜின் வாரிசுதாரர் செ.ராஜேஷ்க்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்கான, பணிநியமன ஆணையினை வழங்கினார்.
முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஃபார்முலா 4 கார் பந்தயம் வெற்றி பெறும் வகையில் பணியாற்றியதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு கலைவாணர் அரங்கில் வழங்கிய பாராட்டு சான்றிதழை, சுற்றுலாத்துறை அமைச்சரிடம் சுற்றுலா ஆணையர் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில் தெரிவித்ததாவது:–
முதலமைச்சரின் நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை சுற்றுலாத் தலமாக முன்னேறி உள்ளது. கொரோனாவிற்கு பிறகு 2021–ம் ஆண்டில் 57,622 ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2022–ம் ஆண்டில் 4,07,139 ஆகவும், 2023–ம் ஆண்டில் 11,74,899 ஆகவும் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு தற்போது 2024 ஆம்ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 7,24,318 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள்.
இதே போன்று உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2021–ல் 11,53,36,719 ஆக இருந்து 2022–ல் 21,85,84,846 ஆகவும், 2023–ல் 28,60,11,515 என உயர்ந்துள்ளது. தற்போது தமிழ்நாட்டிற்கு 2024–ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 17,96,27,146 உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள்.
தமிழ்நாட்டிற்கு ஆண்டு முழுவதும் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் வகையில் முதலமைச்சர் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்டப் பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். அதனடிப்படையில் கன்னியாகுமரியில் உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் ரூ.12.92 கோடி மதிப்பீட்டில் லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டம் செய்யும் பணிகளும்,
தமிழ் பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரமான பூம்புகாரில், கலைஞரால் கட்டப்பட்ட பூம்புகார் கலைக்கூடத்தை ரூ.23.60 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகளும், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தினை ரூ.17.57 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகளும், பிச்சாவரம் சுற்றுலாத்தலத்தினை ரூ.14.07 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கொல்லிமலை, நீலகிரி மலை, ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல் மலை மற்றும் தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் ஆகிய மலைப்பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை மற்றும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்குடா கடற்கரை, திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் ஏரி உள்பட தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை உயர் அலுவலர்கள், மாவட்ட சுற்றுலா அலுவலர்கள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உயர் அலுவலர்கள், மண்டல மேலாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.