சென்னை, ஏப்.12-
தமிழ்நாட்டின் முன்னேற்றம், வளத்தை நோக்கமாக கொண்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், நானும் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டோம். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக அண்ணா தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இணைந்து இருக்கின்றன.
தி.மு.க.வின் பின்னடைவு மற்றும் தீய ஆட்சி நடைமுறையில் இருந்து தமிழ்நாட்டை விடுவிக்க, மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு தடை விளைவித்த வரலாற்றுப் பிழைகளை திருத்த, மேலும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் வாய்ப்புகளுக்கு அடித்தளமிட, இந்த கூட்டணி உறுதியான தன்னம்பிக்கையுடன் ஒன்றிணைந்து உள்ளது.
என் இல்லத்தில் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்னை கவுரவித்த அமித்ஷாவிற்கு என் உள்ளார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்றிணைந்த நோக்கத்துடனும், உறுதியான தீர்மானத்துடனும், பிரகாசமான, வலிமையான மற்றும் இயக்கம் மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்க நாங்கள் முன்னோக்கி பயணிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி, அண்ணா தி.மு.க. மீது காட்டும் உறுதியான ஆதரவுக்காக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணா தி.மு.க., தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை பெருமையாக கருதுகிறோம். தமிழ்நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளம் என்ற ஒரே நோக்கத்தில் உருவான கூட்டணி இது. இந்த முக்கிய நேரத்தில் பிரதமரின் தொலைநோக்கு எண்ணத்தின் கீழ் அண்ணா தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும். மேலும் மாற்றத்திற்கான எங்களது பங்களிப்பை வழங்குவோம்.
வாரிசு அரசியல், ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தில் இருந்து விடுவிக்கவும், ஒரு புதிய தமிழ்நாட்டினை உருவாக்கவும் நாங்கள் இணைந்துள்ளோம். தமிழ்நாட்டின் மக்களுக்கு வெளிப்படையான வளர்ச்சியை முன்னிலைப்படுத்தும் அரசு தேவை. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதை வழங்க நாங்கள் உறுதி எடுத்து இருக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.