முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
சென்னை, ஏப்.18-
தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. அனைத்து அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அமைச்சரவை கூட்டம் நிறை வடைந்ததும் தலைமைச் செயலக வளாகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உள்ளது. இதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும்.
எனவே புதிய துறையில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, விண்வெளி துறையில் வளர்ச்சி இருக்க வேண்டும். அதன்படி, தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை 2025-க்கு இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதில், அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி துறையில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்ப்பது, குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, விண்வெளித் துறைக்கு (ஸ்பேஸ் டெக்) தகுதியான திறமை வாய்ந்த ஆட்களை உருவாக்குவது என்ற இந்த 3 முக்கிய இலக்குகளும் விண்வெளி தொழில் கொள்கையில் முக்கிய இடம் பெற்றுள்ளன.
விண்வெளி தொழில்நுட்ப சேவை துறையிலும் நமது கவனம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் விண்வெளி தொழில்நுட்பத்தில் இருக்கும் போட்டியில் தமிழகமும் ஈடுபடுவதற்கு இந்தக் கொள்கை உத்வேகமாக இருக்கும். சிறு நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பாக, எலான் மஸ்க் நிறுவனத்திற்கு இணையான பணியை சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் செய்து வருகிறது. நமக்கு இங்கேயே ஏ.ஐ. உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் கிடைக்கின்றன.
இந்தத் தொழிலில் காப்புரிமை வாங்க அரசு சலுகை அளிக்கும். ரூ.300 கோடிக்கும் மேலான முதலீடுகளுக்கு சிறப்பு தொகுப்பு சலுகை உள்ளது. மேலும் தமிழகத்தில் ‘ஸ்பேஸ் பே’ என்ற பகுதி, ஒரு சில இடங்கள் அறிவிக்கப்பட்டு, அந்த இடத்தில் முதலீடுகள் வந்தால் அதற்கும் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ‘ஸ்பேஸ் பே’ இன்னும் தெரிவு செய்யப்படவில்லை. இந்தத் தொழிலில் ஊதிய மானியமாக முதல் ஆண்டு 30 சதவீதம், 2-வது ஆண்டு 20 சதவீதம், 3-ம் ஆண்டு 10 சதவீதம் என்ற அளவுக்கு வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் விண்வெளி துறையில் இது பொன்னான நாள். இளம் தலைமுறைக்கு இது முக்கிய அறிவிப்பாக இருக்கும். உலக அளவில் உள்ள தொழில் முனைவோர்கள் இனி தமிழகத்தை நோக்கி வருவார்கள். விண்வெளி தொழில்கள் தமிழகத்தை நோக்கி மிகப்பெரிய அளவு படை எடுக்கும். இந்தியாவில் தமிழகத்தில்தான் முதன்முறையாக விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் கிடைக்கும் பணி, மிக உயரிய பணியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.