சென்னை, ஜூன் 10–
தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சைக்கிளிங் குழுவினர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வெற்றி கோப்பைகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் 7, 8–ந் தேதி ஆகிய நாட்களில் 3.75 கி.மீட்டர் நீளமுள்ள தீவுத்திடல் பார்முலா 4 கார் ரேஸ் நடைபெற்ற பாதையில் தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டியை (3 வது சீசன்) நடத்தியது. இப்போட்டிகளில் 15 வீரர்கள் வரை கொண்ட வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன.
7–ந் தேதி டீம் டைம் ட்ரையல் சைக்கிளிங் போட்டி 4 சுற்றுகள் கொண்டதாகவும், 8–ந் தேதி கிரிட் ரேஸ் சைக்கிளிங் போட்டி 8 சுற்றுகள் கொண்டதாகவும், தீவுத்திடல் பார்முலா 4 கார் ரேஸ் டிராக்கில் நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளில் ரான்சைசர்ஸ் அணியானது 64 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திருச்சி ராக்போர்ட் ரைடர்ஸ் அணியானது 54 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த நம்ம சென்னை ரைடர்ஸ் அணியானது 38 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தையும் பிடித்தன. இந்தப் போட்டிகளில், சைக்கிளிங் வீரர் கிஷோர் இந்த பருவத்திற்கான சிறந்த வீரர் விருதினைப் பெற்றார்.
தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த குழுவினர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து, வெற்றி கோப்பைகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது சைக்கிளிங் வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் நிர்வாகிகள், சைக்கிளிங் வீரர்கள் கலந்து கொண்டனர்.