செய்திகள்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் நியமனம்: மத்திய, மாநில அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

Makkal Kural Official

சென்னை, அக். 18–

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அண்ணா தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக சுனில்குமார் செயல்பட தடை விதிக்க வேண்டும். எந்த தகுதியின் அடிப்படையில் சுனில் குமார் அந்த பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியை தேர்வு வாரிய தலைவராக நியமிக்க முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மனுவுக்கு அக்டோபர் 25ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய – மாநில அரசுகளுக்கும், சுனில்குமாருக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *