புதுடெல்லி, மே 15–
தமிழ்நாடு கவர்னர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிம் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகள் கேட்டு விளக்கம் கேட்டுள்ளார்.
தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கில் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதத்திலும் முடிவெடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் கவர்னர் வழக்கில் மாநில மசோதாக்கள் குறித்து முடிவெடுப்பதற்கு கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், சுப்ரீம் கோர்ட்டிடம் ஆலோசனை கேட்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143-ன் கீழ் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது சுப்ரீம் கோர்ட்டால் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட 14 கேள்விகளுக்கு கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார்.
1. பிரிவு 200ன் கீழ் ஒரு மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்போது, அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு விருப்பங்கள் என்னென்ன?
2. ஒரு மசோதா கவர்னர் அனுப்பி வைக்கப்படும்போது, அவருக்கு இருக்கும் அரசியலமைப்பு விருப்பங்களையும் செயல்படுத்தும்போது, அமைச்சரவை வழங்கும் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா?
3. பிரிவு 200-ன் கீழ் கவர்னரின் அரசியலமைப்பு விருப்புரிமை நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டதா?
4. பிரிவு 200ன் கீழ் ஒரு கவர்னரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறுஆய்வுக்கு, பிரிவு 361 முழுமையான தடையை விதிக்கிறதா?
5. அரசியலமைப்பு ரீதியாக காலக்கெடு இல்லாவிட்டாலும், சட்டப்பிரிவு 200ன் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் கவர்னரால் பயன்படுத்துவதற்காக, நீதிமன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியுமா மற்றும் பரிந்துரைக்க முடியுமா?
6. பிரிவு 201ன் கீழ் ஜனாதிபதியால் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது மறுஆய்வுக்கு உட்பட்டதா? நியாயப்படுத்தத்தக்கதா?
7. பிரிவு 201ன் கீழ் ஜனாதிபதியின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா?
8. கவர்னர் ஒரு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கும்போது, பிரிவு 143-ன் கீழ் சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையைப் பெறவும், உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டுமா?
9. பிரிவு 200 மற்றும் 201ன் கீழ் கவர்னர் மற்றும் ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள், அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, நீதித்துறையால் 200 மற்றும் 201ன் கீழ் ஜனாதிபதியின் முடிவுகள் நியாயப்படுத்தப்படுமா?
10. பிரிவு 142ன் மூலம் ஜனாதிபதி அல்லது கவர்னர் பயன்படுத்தும் அரசியலமைப்பு அதிகாரங்களை நீதித்துறை மாற்றியமைக்கவோ அல்லது மீறவோ முடியுமா?
11. பிரிவு 200ன் கீழ் மாநில சட்டப்பேரவையால் இயற்றப்படும் மசோதா, கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாகுமா?
12. சுப்ரீம் கோர்ட்டின் எந்த அமர்வும் முதலில் ஒரு வழக்கில் கணிசமான அரசியலமைப்பு விளக்கத்தை உள்ளடக்கியதா என்பதைத் தீர்மானித்து, பிரிவு 145(3)ன் கீழ் குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டுமா?
13. பிரிவு 131-ன் கீழ் வழக்குத் தொடருவதைத் தவிர, வேறு எந்த வழியிலும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு அரசியலமைப்பு சுப்ரீம் கோர்ட்டை அனுமதிக்கிறதா?
14. அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் ஜனாதிபதியின், கவர்னரின் அதிகாரங்கள் பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியுமா?
மேற்கண்ட கேள்விகளை எழுப்புவதன் மூலம், ஜனாதிபதி நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரத்தின் அரசியலமைப்பு எல்லைகள் குறித்து தெளிவுபடுத்த முயற்சிக்கிறார், இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் நீதித்துறை விளக்கத்தின் அவசியத்தை வலுப்படுத்துகிறது.மேலும், இந்த விளக்கத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.