சென்னை, டிச. 20–
தமிழ்நாடு – ஆந்திரா இடையேயான 28 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு 1,338 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சாலைகள்தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கும் முக்கிய காரணியாக உள்ளன. நாடு முழுவதும் 4 வழிச்சாலை, ஆறு வழிச்சாலை எட்டு வழிச்சாலை என நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சரான நிதின் கட்கரி, தமிழ்நாட்டில் சாலை மேம்பாடு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:–
“தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை 40 இல் வாலாஜாபேட்டை/ ராணிப்பேட்டையில் இருந்து தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லை வரை 28 கிமீ தொலைவிலான நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு 1,338 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக இருக்கும் என்றும் இந்த நெடுஞ்சலை, இரு மார்க்கமும் 2 வழிச் சர்வீஸ் சாலைகளை கொண்டிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இணைப்பை மேம்படுத்தும்
வாலாஜாபேட்டை/ ராணிப்பேட்டைக்கு 10 கிமீ புறவழிச்சாலை அமைக்கப்படும் என்றும் இந்த நெஞ்சாலையில் 4 பெரிய பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை சென்னை மற்றும் பெங்களூர், திருப்பதி மற்றும் புகழ்பெற்ற வேலூர் சிஎம்சி மருத்துவமனை இருக்கும் வேலூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும் என்றும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டையில் சிறப்புப் பொருளாதார மண்டலம் 2025ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், இந்தத் திட்டம் கணிசமான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும். இந்த நெடுஞ்சாலையில் அமைக்கப்பட உள்ள 2-வழிச் சர்வீஸ் சாலை உள்ளூர் போக்குவரத்தை உறுதி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நெடுஞ்சாலையின் மூலம் சென்னை, திருப்பதி, பெங்களூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடையிலான பயணம் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.