செய்திகள்

தமிழில் மட்டுமே அரசாணை: தமிழக அரசு உத்தரவு

Makkal Kural Official

சென்னை, ஏப். 16–

தமிழக அரசு தரப்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் இனி தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் வெளியிடப்படும் அரசாணைகள் மற்றும் சில சுற்றறிக்கைகள் தமிழ் அல்லாமல் ஆங்கில மொழியிலும் வெளியிடப்பட்டு வந்தன. இதனிடையே, மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, தமிழ் மொழிக்கு அரசுத் துறைகளில் முக்கியத்துவம் அளிப்பதை உறுதிபடுத்த தொடங்கியுள்ளது.

அனைத்து துறை செயலாளர்கள், கலெக்டர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:–

‘‘தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழைப் பயன்படுத்தவும் கீழ்காணும் அறிவுறுத்தல்களை தவறாது பின்பற்ற வேண்டும்.

தமிழக அரசாணைகள், சுற்றறிக்கை குறிப்புகள் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும். துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து தனக்கு வரும் தலைவர்களின் கடிதங்களில் ஆங்கிலத்தில் கையெழுத்து இருப்பதாக சமீபத்தில் ராமேஸ்வரம் பாம்பன் ரெயில் பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசி இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *