செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர், கொடி தோன்றிய வரலாறு

Makkal Kural Official

மாநாட்டில் விளக்க வீடியோ ஒளிபரப்பு

விக்கிரவாண்டி, அக்.28-

தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர், கட்சிக் கொடி குறித்த வரலாற்றை நடிகர் விஜய் விளக்கமாக தெரிவித்தார்.

மாநாட்டில் விஜய் பேச்சை நிறைவு செய்த பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் தோன்றிய வரலாறு, கொடி உருவான வரலாறு குறித்து நடிகர் விஜய் பேசிய வீடியோ காட்சி மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. அதில் நடிகர் விஜய் பேசியதாவது:-

அரசியலில் நம்ம பெயரே ஒரு அடையாளமாக மாற வேண்டும். பாசிட்டிவ் எனர்ஜி அந்த பெயரில் இருக்க வேண்டும். அப்படி ஒரு நேர்மறை அர்த்தம், வலிமையை தரும் சொல், அந்த சொல் வெற்றிதான். வெற்றி என்றால் நினைத்ததை மிச்சம் இல்லாமல் செய்து முடிப்பது. மனதில் இருக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவது. அப்படிப்பட்ட வார்த்தைதான் நம்முடைய கட்சியின் மையச் சொல்லாகவும், மந்திர சொல்லாகவும் மாறியுள்ளது.

நம்முடைய கட்சியின் முதல் சொல் தமிழகம். நம்முடைய மக்களின் அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் சொல்ற மாதிரி ஒரு வார்த்தை வேண்டும் என முடிவு செய்து தேர்ந்தெடுத்தது தான் அந்த வார்த்தை. தமிழகம் என்றால் தமிழர்களின் அகம். பல இலக்கியங்களில் இடம்பெற்ற வார்த்தைதான், அண்ணாவால், முறைப்படி தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது நம் எல்லோருக்கும் தெரியும்.

நம் கட்சியின் 3-வது வார்த்தை கழகம். கழகம் படை பயிலும் இடம் என்ற அர்த்தம் இருக்கிறது. அந்த வகையில் நம்முடைய இளம் சிங்கங்கள் பயிலும் இடம்தான் நம்முடைய கட்சி, கழகம்.

தமிழகம் வெற்றிக் கழகம் என்ற 3 வார்த்தைகளை கொண்டு மூண்டெழுந்து இருக்கும் அரசியல் உலகின் அணையா பெருஞ்சுடர். உலகத் தமிழர்களோட மிகப் பெரிய அடையாளமாக மாறி காலம் காலத்துக்கும் களத்தில் நிற்கப் போவதுதான் தமிழக வெற்றிக் கழகம்.

கொடி பற்றிய வரலாறு

நம்முடைய கட்சிக் கொடி பற்றி யோசித்த போது என்னவெல்லாம் தோன்றியது என்பது பற்றி பகிருகிறேன்.

நம்முடைய கொடியில் மேலும், கீழும் இருப்பது அடர் ரத்த சிவப்பு நிறம். பொதுவாக சிவப்பு நிறம் புரட்சியின் குறியீடு.

நம்முடைய கொடியின் நடுவில் உள்ள மஞ்சள் நிறம், மகிழ்ச்சி, நம்பிக்கை, லட்சியம், மனத்தெளிவு, உற்சாகம், ஆற்றல், நினைவாற்றலை தூண்டி இலக்கை நோக்கி ஓட வைக்கும் நிறம்.

கொடியில் இடம்பெற்றுள்ள பூ தான் மாபெரும் வெற்றி குறியீடான வாகைப்பூ. மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் போருக்கு செல்வதற்கு முன்பே வெற்றியை முன்கூட்டியே கணித்து வாகைப்பூ சூடிக்கொண்டு போனார் என்று சொல்கிறார்கள். வாகை என்றாலே வெற்றி என்ற அர்த்தம் இருக்கிறதாம். நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தில் இடம்பெற்றுள்ள வாகைப்பூ மக்கள் வாகைக்கானது. இந்த மண்ணின் வெற்றியை சொல்வது.

பிறகு யானை தன் நிறத்திலும், குணத்திலும், உருவத்திலும், உயரத்திலும் தனித்தன்மை கொண்டதுதான் யானை. அதிலும் போர் யானை தன்னிகரற்றது. போர் தந்திரம் பழகிய யானைகள் எதிரிகளின் தடைகளையும், படைகளையும் சுற்றி வளைத்து துவம்சம் செய்வதில் கில்லாடிகள். எதிரிகளை பின்னங்கால் பிடறியில் அடிக்க அலறிக்கிட்டே ஓட வைக்கும். அப்படி போர் முனையில் இருக்கும் பலமான இரட்டை போர் யானைகள் தான், தமிழக வெற்றிக் கழக கொடியில் இருக்கிறது.

28 நட்சத்திரங்கள்..

கொடியின் நடுவே உள்ள வாகைப்பூவை சுற்றி நாம் வென்றெடுக்க வேண்டிய நம் செயல் திட்டங்களை சொல்கிற மாதிரி 28 நட்சத்திரங்கள் இருக்கிறது. பறக்கட்டும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி. திறக்கட்டும் புதிய திசைகள். சிறக்கட்டும் தமிழகம். இவ்வாறு அதில் அவர் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *