சென்னை, ஏப்.28-–
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கன்னியாகுமரி அருகே ஆழ்கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி.க்கு மத்திய எரிசக்தி துறை அனுமதி வழங்கி உள்ளது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி.) செயல்படுகிறது. நாட்டில் எரிவாயு இருக்கும் இடங்களை கண்டறிதல் மற்றும் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியில் 70 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் 84 சதவீதமும் இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
நாடு முழுவதும் உள்ள 26 வண்டல் வடிநிலங்களில் ஹைட்ரோ கார்பன்களை கண்டறிந்து அவற்றை எடுக்கும் பணிகளில் ஓ.என்.ஜி.சி ஈடுபட்டு உள்ளது.
நாடு முழுவதும் 11 ஆயிரம் கிலோ மீட்டர் எரிவாயு குழாய்கள் ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமானதாக இயங்கி வருகின்றன. மொத்தம் 210 ஆழ்துளைகளை இயக்கி வருகிறது.
இந்தநிலையில், மத்திய எரிசக்தி இயக்குனரகம் (டி.ஜி.எச்.) சார்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்ப தற்கான திறந்தவெளி அனுமதி அடிப்படையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 9-வது சுற்று ஏலம் விடப்பட்டது. இதில் தமிழக ஆழ்கடல் பகுதியில் 4 வட்டாரங்கள் உள்பட நாடு முழுவதும் 28 வட்டாரங்களில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 596 சதுர கிலோ மீட்டர் ஏலம் விடப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரியின் தென்முனையில் உள்ள ஆழ்கடலில் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அதில் முதல் இடத்தில் 9 ஆயிரத்து 514.63 சதுர கிலோ மீட்டரும், 2-வது பகுதியில் 9 ஆயிரத்து 844.72 சதுர கிலோ மீட்டரும், 3-வது இடத்தில் 7 ஆயிரத்து 795.45 சதுர கிலோ மீட்டர் மற்றும் சென்னைக்கு அருகே ஆழ்கடலில் தேர்வு செய்யப்பட்ட ஒரு இடத்தில் 5 ஆயிரத்து 330.49 சதுர கிலோ மீட்டர் உள்பட 32 ஆயிரத்து 485.29 சதுர கிலோ மீட்டர் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளன. இந்த இடங்களில் ஆய்வு மற்றும் கிணறு அமைக்க சர்வதேச அளவில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கண்டறியப்பட்டுள்ள இடங்களில் இருந்து எண்ணெய், எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளன. இதற்கான முறையான அறிவிப்பை, மத்திய எரிசக்தி துறையின் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
மீனவர்கள் எதிர்ப்பு
எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளால் கடல் வளம் கடுமையாக பாதிக்கும் என்று மீனவ மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சூழலில், கடந்த வாரம் டெல்லியில் ஏலம் இறுதி செய்யப்பட்டு தமிழ்நாட்டில் 4 வட்டாரங்கள் உள்பட இந்தியாவில் 28 வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு சென்னையில் உள்ள மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் கு.பாரதி கூறியதாவது:-–
இந்தியாவை பொறுத்தவரையில் மீன்பிடித் தொழில் முக்கியமானது. அப்படி இருக்கும் கடல் பகுதிகளில் இதுபோன்ற திட்டங்களை கொண்டு வருவது சரியான முடிவு அல்ல. இதுதொடர்பாக நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவதோடு, மத்திய-மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. அவர்கள் எதிர்பார்க்கும் நீலப்பொருளாதாரம் இதுதானா?. இதுபோல எல்லா வகையிலும் மீனவர்களை சுரண்டிக்கொண்டே இருக்கிறார்கள். மீனவளத்தை பெருக்குகிறோம் என நாடகம் ஆடுகிறார்கள். கடலில் கொட்டும் ஆயிலை அள்ளுவதற்கு இவர்களிடம் தொழில்நுட்பம் இல்லை. ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் இதுபோல திட்டங்களை கொண்டு வருகிறார்கள். சீரான வளர்ச்சிதான் சரியான வளர்ச்சி. கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்கும் திட்டத்தால் மீன்வளமும் பாதிக்கும், மீனவர்களின் வாழ்வாதாரமும் அழிந்துபோகும். எனவே இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறோம். அனைத்து மீனவர் சங்கங்களும் கூடி இதுதொடர்பாக அடுத்தகட்டமாக என்ன செய்யலாம்? என முடிவெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுமதியை ரத்து செய்ய
ராமதாஸ் வேண்டுகோள்
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கன்னியாகுமரி அருகே ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை எடுப்பதால் கடல் வளங்கள் பாதிக்கப்படும். சரிசெய்ய முடியாத சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும். எனவே தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டில் ஓ.என்.ஜி.சி.க்கு வழங்கப்பட்டுள்ள 4 இடங்களுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறி உள்ளார்.