செய்திகள்

தமிழக அரசே மதுக்கடைகளை இழுத்து மூடு: திருமாவளவன் மீண்டும் பரபரப்பு வீடியோ

Makkal Kural Official

சென்னை, செப். 22–

தமிழக அரசே மதுக்கடைகளை இழுத்து மூடு என்று திருமாவளவன் மீண்டும் பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கடந்த சில நட்களுக்கு முன்பு “ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்” என்று வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இதனிடையே கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2ந்தேதி நடத்தப்பட உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க.வுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது மது விலக்கு தொடர்பாக கோரிக்கைகளை நேரில் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மாநாட்டில் தி.மு.க.வும் பங்கேற்க முடிவு செய்துள்ளது. இதனால் தி.மு.க.–விடுதலை சிறுத்தைகள் இடையே நீடித்து வந்த சலசலப்பு அடங்கியது.

இந்த நிலையில் திருமாவளவன் மது விலக்கு தொடர்பாக இன்று மீண்டும் பரபரப்பான பதிவுகளை வெளியிட்டு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம், போதைப் பொருள் வேண்டாம், மது விலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகின்றன. ஆனால், இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன, மது ஆலைகள் இயங்குகின்றன.

இதுதான் நாம் முன்வைக்கிற கேள்வி. எல்லா கட்சிகளும் மதுவிலக்கு தேவை என்னும் கருத்தில் உடன்படுகிறபோது இன்னும் ஏன் மதுக்கடைகள் திறந்து இருக்கின்றன? அனைவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுக்கிற போது ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட முடியும்! இந்திய அரசே! தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கு! மதுவிலக்கு சட்டத்தை இயற்று! தமிழ்நாடு அரசே! மதுக்கடைகளை இழுத்து மூடு! இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *