செய்திகள்

தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

Makkal Kural Official

சென்னை, ஏப்.23-

தமிழகத்தில் புதிய தனியார் பல்கலைக் கழகங்கள் அமைப்பதற்கு சட்டசபை தான் அனுமதி வழங்கும். மேலும் இனி பொதுமக்கள் பயன்பாடு கட்டிடங்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்க பட்டுள்ளது. தமிழக அரசின், இந்த 2 மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக அரசின் மசோதாக்களுக்கு அனுமதி தருவதில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி மீது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், கவர்னர் ரவியை சுப்ரீம் கோர்ட் கடுமையாக கண்டித்தது. அதோடு அவர் விதிகளை மீறி மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது தவறு என்று கூறிய சுப்ரீம் கோர்ட், 10 மசோதாக்களுக்கும் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி வழங்கியது. மேலும் மாநில அரசின் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கவர்னர்களுக்கு மட்டு மின்றி ஜனாதிபதிக்கும் அதிகபட்சமாக 3 மாத கெடு விதித்தது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

அதாவது தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது கட்டிட அனுமதி தொடர்பான இந்த மசோதாக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந் தேதி தமிழக சட்டசபையில் நிறை வேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

அந்த மசோதாக்களுக்கு கவர்னர் ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். அதனால் உடனடியாக அது அரசாணை வெளியிடப்பட்டு சட்டமாக கொண்டுவரப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு பிறகு, கவர்னர் அனுமதி அளித்த மசோதாக்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மசோதாவில் என்ன இருக்கிறது?

அதன் விவரம் வருமாறு:-

“தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) சட்டம், 2024″ன்படி தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இனி எந்தவொரு தனியார் பல்கலைக்கழகமும், மாநில சட்டசபை இயற்றும் தனி சட்டத்தின் மூலம் மட்டுமே நிறுவ அனுமதிக்கப்படும். மேலும் ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட 8 பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட தொடக்க தேதிகள் சட்ட பூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. அதோடு மருத்துவ கல்வியில் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்று சேர்க்கப்பட்டுள்ளது.

“பொது கட்டிடங்கள் உரிமம் அளிப்பு சட்டம் (திருத்தம்), 2024″ன்படி தமிழகத்தில் இனி பொது கட்டிடங்களுக்கு உரிமம் பெறுவது அவசியம் ஆகும். எந்த கட்டிடமும், உரிமம் இல்லாமல் பொது பயன்பாட்டுக்கு, அதாவது அறைகள், மண்டபங்கள், திருமண அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்றவற்றை பயன்படுத்த முடியாது.

பொதுக்கட்டிட உரிமம்

இந்த பொதுக்கட்டிட உரிமம் பெற அரசின் ஆன்லைன் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த அனுமதி பெறுவதற்கு, அந்த கட்டிடத்தின் கட்டுமான உறுதிப்பத்திரம் மிக அவசியம். என்ஜினீயர் வழங்கும் இந்த பத்திரத்தை சமர்ப்பித்தவுடன், அது சரிபார்க்கப்பட்டு உரிமம் தானாக வழங்கப்பட்டு விடும்.

இந்த கட்டிடத்தின் பாதுகாப்பில் சந்தேகம் ஏற்பட்டால் மாவட்ட கலெக்டர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். மிக முக்கியமாக என்ஜினீயர் தவறான கட்டுமான உறுதிப்பத்திரம் கொடுத்தால், அவருக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அதோடு அவரது பதிவு ரத்து செய்யப்படும். அரசு மற்றும் உள்ளாட்சி திட்டங்களில் பங்கேற்பதற்கு அவருக்கு தடை விதிக்கப்படும்.

இந்த சட்டம், அரசின் தேதி அறிவிப்புக்கு பின் உடனடியாக அமலுக்கு வரும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *