ரூ.9 ஆயிரத்து 335 கோடி செலவில் விமான நிலையம்
கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் திட்டம் நீட்டிப்பு
சென்னை, பிப்.15-–
ரூ.9 ஆயிரத்து 335 கோடி செலவில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிப்பது குறித்த திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரெயில் முதல் கட்ட திட்டத்தில் சென்னை சென்டிரல் முதல் பரங்கிமலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரெயில்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், முதல் கட்ட திட்டத்தில் மெட்ரோ ரெயில் சேவையை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் முனையம் வரை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் சேவையை நீட்டித்து இயக்குவது குறித்து மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த திட்ட அறிக்கை கடந்த 2023–-ம் ஆண்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பஸ் முனையம் வரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை நீட்டிப்பதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை நேற்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கே.கோபாலிடம், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் திட்ட அறிக்கையை சமர்ப்பித்தார். அதன்படி, 15.46 கிலோ மீட்டர் தூரத்தில் 13 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய உள்ளது. இதன் திட்ட மதிப்பு ரூ.9 ஆயிரத்து 335 கோடி ஆகும்.
விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையில் 13 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய உள்ளது. அதன்படி, விமான நிலையம் (கூடுதலாக ஒன்று), பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, திரு.வி.க.நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் ஆகிய 13 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.