சென்னை, செப்.26-
தமிழகத்தில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு வைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை வைத்து பணியாற்றி வருகிறார். உள்நாட்டு தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் அதேவேளையில், வெளிநாடுகளில் இருந்தும் தொழில் முதலீடுகளை பெற தீவிர முயற்சி எடுத்து வருகிறார். கடந்த மாதம் கூட அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ரூ.7,616 கோடி முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் ரூ.9.74 லட்சம் கோடி மதிப்பிலான மூதலீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈர்த்து உள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் 31 லட்சம் இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு நம்புகிறது. இந்த எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்த முதலமைச்சர் இலக்கு வைத்து உள்ளார்.
தமிழக அரசின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முன்னணியினை, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் முன்னின்று செய்து வருகிறது. இதன் அலுவலகம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென்று சென்றார். அவருடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகனாந்தம் மற்றும் அதிகாரிகளும் சென்றனர்.
அலுவலகத்திற்கு வந்த முதலமைச்சரை ஊழியர்கள் வரவேற்றனர். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தை சுற்றி பார்த்தார். பின்னர் அங்கு இருந்த அரசு முறை பயணங்கள் குறித்த புகைப்பட பலகையில் தனது கையால் ‘50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தான் நம் இலக்கு’ என்று தனது கைப்பட எழுதினார். உடனே அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும், உங்களது இலக்கினை நிச்சயம் எட்டுவோம் என்று ஒருமித்த குரலில் உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் அவர்களுடன் ஆலோசனை நடத்தி சென்றார். அப்போது அவர் தொழில் முதலீடுகள் குறித்தும், அதன் தொடர்ச்சியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.
பின்னர் இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
அரசு நிர்வாகத்தில் உள்ள இளம் ரத்தங்களான தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் பணியாளர்களைச் சந்தித்தேன். இவர்களுடைய சிறப்பான பணியினால், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளில் 60 சதவீத பணிகள் நிறைவேறியிருக்கிறது. மீதமுள்ள 40 சதவீத பணிகள் நிறைவேறுவதற்கான பணிகளை விரைந்து செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன். 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும் என அவர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.