செய்திகள்

தடையை மீறி கையெழுத்து இயக்கம்

Makkal Kural Official

சென்னை, மார்ச் 6–

சென்னையில் தடையை மீறி மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்திய பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியதற்கு, தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க. கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில், ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற கையெழுத்து இயக்கம் துவக்க நிகழ்ச்சி சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்தது. இதனை பா.ஜ.க. கட்சியின் முன்னாள் தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் இணையதளம் வாயிலாக ஆதரவு தெரிவிக்க ‘புதிய கல்வி’ என்ற இணையதளத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இந்த நிலையில் இன்று சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற தமிழிசை சவுந்தரராஜன் முயன்றார். அப்போது மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று போலீசார் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது போலீசாருக்கும், தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமைதியான முறையில் கையெழுத்து இயக்கம் நடத்துவேன் என்று தமிழிசை கூறினார். எனினும் இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறிய போலீசார், கட்டாயம் கையெழுத்து இயக்கத்தை நடத்த முற்பட்டால் கைது செய்வோம் என்று கூறியுள்ளனர்.

சாமானிய மக்களிடமே கையெழுத்து வாங்குகிறோம். இதற்கு போலீசார் ஒத்துழைக்க வேண்டும். என்னை ஏன் தீவிரவாதி போல போலீசார் சுற்றி உள்ளனர் என்பது எனக்கு புரியவில்லை என்று தமிழிசை கூறினார்.

இதனிடையே போலீசாரை கண்டித்து பா.ஜ.க.வினர் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை நடத்துவேன் என்று கூறிய நிலையில், தமிழிசை சவுந்தரராஜனை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். ஆனால் போலீசார் வாகனத்தில் ஏற மறுத்து, தமிழிசை போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை சுற்றி போலீசார் நின்றுக் கொண்டு, கையெழுத்து இயக்கத்தை தடுத்து நிறுத்தினர். சுமார் 2 மணி நேரமாக தொடர்ந்து இருதரப்பினரும் ஆவேசமாக பேசிக் கொண்டதை அடுத்து, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பிய பா.ஜ.க.வினர் சிலரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அண்ணாமலை கண்டனம்

தமிழிசை சவுந்தரராஜன் உட்பட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்துள்ளதற்கு, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, பா.ஜ.க. சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற முன்னாள் கவர்னர் தமிழிசையை கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை. 60 ஆண்டுகளாகத் தமிழ் மொழியை வியாபாரமாக்கி, தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கும் தி.மு.க.வின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. தி.மு.க.வின் நாடகத்தைப் பொதுமக்கள் உணரத் தொடங்கி, மும்மொழிக் கொள்கைக்குப் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு, பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதலமைச்சர்.

அதன் விளைவே, ஜனநாயக ரீதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தைத் தடுப்பதும், கைது செய்வதும். இந்தக் கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம். எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாகக் கைது செய்ய முடியும் முதலமைச்சரே? தேசியக் கல்விக் கொள்கை, உங்கள் கட்சியில் இருக்கும் கடைக்கோடி தொண்டர்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வியையும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பையும் அரசுப் பள்ளியில் இலவசமாக வழங்குகிறது. அதை ஏன் தடுக்கிறீர்கள்? என கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *