சென்னை, ஏப்.1-
இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.68,080க்கும், கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.8,510க்கும் விற்பனையானது.
வரலாற்றில் முதல்முறையாக தங்கத்தின் விலை ரூ. 68,000-ஐ கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை ஒரே நாளில் உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதத்தில் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை தொட்டது. அதன்பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.55 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில் ஜூலை மாதம் மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதனால் விலை மளமளவென சரிந்து, ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது.
மேலும் விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எந்த வேகத்தில் விலை குறைந்ததோ, அதைவிட அசுர வேகத்தில் விலை அதிகரித்தது. இதற்கிடையே தங்கம் விலை கடந்த ஜனவரி மாதம் ரூ.61 ஆயிரத்தை நெருங்கியது. தொடர்ந்து படிப்படியாக தங்கம் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி ஒரே நாளில் 2 முறை ஏற்றம் கண்டு, ‘கிடுகிடு’வென உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.66 ஆயிரத்து 400க்கு விற்பனை ஆனது. கடந்த 22ந்தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 230-க்கும், ஒரு பவுன் ரூ.65 ஆயிரத்து 840-க் கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, தங்கம் விலை படிப்படியாக குறைய தொடங்கியது.
இந்த சூழலில் கடந்த 28ந் தேதி தங்கம் விலை மீண்டும் ரூ.66 ஆயிரத்தை தொட்டது. மறுநாளே, அதாவது கடந்த 29-ந்தேதி புதிய உச்சமாக ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 360-க்கும், சவரன் ரூ.66 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 30ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால், தங்கம் விலையில் மாற்றம் ஏதுமின்றி விற்பனையானது.
இன்றும் அதிரடி உயர்வு
இந்த நிலையில் தங்கம் விலை நேற்று ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 425-க்கும், சவரன் ரூ.67 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டு மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
இன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்தை கடந்து மற்றொரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் இன்று (1–ந்தேதி) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8510-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,080-க்கும் விற்பனையாகிறது.வரலாற்றில் முதல்முறையாக தங்கத்தின் விலை ரூ. 68,000-ஐ கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.113-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
சவரன் ரூ.80 ஆயிரம்
தங்கம் விலை அன்றாடம் பல புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், “நாளை முதல் (ஏப்.2) அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த இறக்குமதி வரி அமலுக்கு வருவதால் வர்த்தகப் போர் வலுத்துள்ளது. அதனால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்துள்ளது. இதுவே தங்கம் விலை உயரக் காரணம் என்று சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வர்த்தகப் போரின் காரணமாக சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக உள்ள நாடுகள் தங்கள் கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலர்களை விற்றுவிட்டு தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. அத்துடன் அமெரிக்க டாலரின் மதிப்பும் குறைந்து வருகிறது.
இத்தகைய காரணங்களால் தங்கம் விலை இன்னும் பெரிய உச்சத்தை காணும் சூழல் உள்ளது. சவரன் ரூ.80,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.