சென்னை, மார்ச் 31–
தங்கம் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,400க்கும், ஒரு கிராம் ரூ.8,425க்கும் விற்பனையாகிறது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
கடந்த 10–ந்தேதி ஒரு சவரன் ரூ.64,400க்கும், 14–ந்தேதி காலை ஒரு சவரன் ரூ.65,840க்கும், பகலில் ரூ.66,400க்கு விற்பனையானது. கடந்த 23ந் தேதி ஒரு சவரன் ரூ.66,840க்கு விற்பனை ஆனது. இது அப்போதைய உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. அதற்கு மறுநாளே விலை குறையத் தொடங்கியது. ஆனால் கடந்த 26ந் தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி பயணிக்க தொடங்கியது.சென்னையில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் விலை, கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 8,360 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 66,880 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (மார்ச் 30) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,425க்கு விற்பனை ஆகிறது.
ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சமாக ரூ.67 ஆயிரத்தை தாண்டி உள்ளது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த 20 நாளில் சவரனுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.113-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,13,000 ஆக உள்ளது.