செய்திகள்

தங்கம் விலை ‘கிடுகிடு’ உயர்வு; ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்தை தாண்டியது

Makkal Kural Official

சென்னை, ஏப்.17–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் வரலாறு காணாத புதிய உச்சமாக இன்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை ஆகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் தங்கம் கிராம் 8,720 ரூபாய்க்கும் சவரன் 69,760 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து 8,815 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 760 ரூபாய் அதிகரித்து, 70,520 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,360க்கும், கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 8,920க்கு விற்பனை ஆகிறது.

2 வாரங்களில் சவரனுக்கு ரூ.5,965 உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. வெள்ளி நேற்றைய விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 110-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து விலை உயர்ந்து வரும் நிலையில் நடுத்தர மக்களால் தங்கத்தை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் தங்கம் விலை இனி இதுபோல தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்குமா.. இல்லை குறைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரி எதிரொலியால், பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். இதனால் தங்கம் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *