சவரனுக்கு ரூ.2,200 அதிகரிப்பு: தங்கம் விலை ரூ.74 ஆயிரத்தை தாண்டியது
சென்னை, ஏப். 22–
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சமாக இன்று சவரனுக்கு ரூ.2,200 அதிகரித்து ரூ.74,320-க்கு விற்பனை ஆகிறது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 9,015-க்கும், சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 72,120-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 275 உயர்ந்து ரூ. 9,290-க்கும் சவரனுக்கு ரூ. 2,200-க்கு உயர்ந்து ரூ. 74,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ. 111-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,11,000-க்கும் விற்பனையாகிறது.
வரும் 30-ம் தேதி அட்சய திருதியை என்பதால், பொதுமக்கள் ஒரு கிராம் தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், டாலரின் மதிப்பைக் குறைக்க சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன. இதனால் தங்கம் விலை சர்வதேச அளவில் உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் இந்நிலை நீடிக்கிறது. வரும் நாட்களில் தங்கம் விலை சற்று குறைந்தாலும், மீண்டும் அதிகரிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரம் வரை அதிகரிக்கும். அடுத்த ஆண்டு ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையாகும் என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.