வாஷிங்டன், ஜன. 24–
அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்யும் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முன்னதாக கடந்த 20ம் தேதி அமெரிக்க 47வது அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், உடனடியாக பல்வேறு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதில், “பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்படுகிறது. அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும். இந்த உத்தரவு 30 நாட்களில் நடைமுறைக்கு வரும். அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களின் குழந்தைகள் அமெரிக்காவின் ‘அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்கள்’ அல்ல என்பதால், குடியுரிமை சட்டத்தின் 14-வது திருத்தத்தில் வழங்கப்பட்ட அரசியலமைப்பு உத்தரவாதம் அவர்களுக்கு பொருந்தாது” என்று பிறப்பித்த உத்தரவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
டிரம்ப்பின் இந்த அரசாணை மூலம் அந்தக் குழந்தைகளின் குடியுரிமை பறிக்கப்பட்டால், மருத்துவக் காப்பீடு போன்ற அரசின் அடிப்படை உதவிகள் அவர்களுக்குக் கிடைக்காமல் போகும். அவர்கள் பெரியவார்கள் ஆகும்போது அமெரிக்காவில் சட்டபூர்வமாக வேலை செய்யும் உரிமை, வாக்களிக்கும் உரிமை, அநீதிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் இல்லாமல் போய்விடும்.
இதனை எதிர்த்து அமெரிக்காவின் 22 மாகாண அரசுகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில் சியாட்டல் மாகாண நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜான் கோக்னார் கூறுகையில், இந்த ஆணையை அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதாக எவ்வாறு கருத முடியும் என்று அரசுத் தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.மேலும், இது ஒரு வெளிப்படையான அரசியலமைப்பு எதிரான உத்தரவு என்று விமர்சித்த நீதிபதி, தான் 40 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதியாக இருப்பதாகவும், இப்படியொரு அரசியலமைப்பு முரணான வழக்கை பார்த்ததாக நினைவு இல்லை என்றும் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து, டிரம்ப் பிறப்பித்த அரசாணையை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
இதன் மூலம் டிரம்ப் உத்தரவு அமலாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் டிரம்ப்பிடம் தடை உத்தரவு குறித்து தெரிவிக்கப்பட்டபோது, ‘நிச்சயம் மேல்முறையீடு செய்வோம்.’ என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் டிரம்ப்பின் ஆணைக்கு எதிராக நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தாலும், அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பிற்பபு சார் குடியுரிமையை டிரம்ப்பால் ரத்து செய்ய முடியும். ஆனால் அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். எனவே ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் அத்தகைய அரசியல் சாசனத் திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் ஹெச்1-பி விசா மூலம் அமெரிக்கா சென்று அங்கு பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் நிலையில் டிரம்ப்பின் இந்த உத்தரவு அவர்களுக்கு மிகப் பெரிய கவலையை அளித்துள்ளது. வேலை விசாக்கள் அல்லது சுற்றுலா விசாக்கள் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இனி இயல்பாக குடியுரிமை பெற மாட்டார்கள் என்பதால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர். அதோடு, தற்காலிக விசாக்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை ஆண்டுதோறும் வேலைக்கு அமர்த்தும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
கடந்த 2022ம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி 1.1 கோடி பேர் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அந்த எண்ணிக்கை 1.3 கோடி முதல் 1.4 கோடி வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
#American Citizenship #America #Trump