புதுடெல்லி, ஜூலை 9–
டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்த நிலையில், அனைத்து அரசு துறை ஊழியர்களின் விடுமுறையையும் முதல்வர் கெஜ்ரிவால் இன்று ரத்து செய்து உள்ளார். டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று கனமழை பெய்தது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 15 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
கடந்த 1982-ம் ஆண்டு ஜூலைக்கு பின்பு அதிக மழை பொழிவு ஏற்பட்ட நிலையில், கெஜ்ரிவால் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், மொத்த பருவகால மழையில் 15 சதவீதம் 12 மணிநேரத்தில் பெய்து உள்ளது.
அனைத்து அமைச்சர்கள் மற்றும் டெல்லி மேயர் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று ஆய்வு செய்வார்கள். அனைத்து அரசு துறை அதிகாரிகளும் ஞாயிறு விடுமுறையை ரத்து செய்து விட்டு, உடனடியாக களத்திற்கு வரும்படி அறிவுறுத்தப்படுகிறது என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் பிளாட் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 58 வயது பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார். ராஜஸ்தானில் மழைக்கு 4 பேர் உயிரிழந்து உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் மற்றும் அவரது 6 வயது மகள் உயிரிழந்து உள்ளனர்.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற மாநிலங்களில் கன முதல் தீவிர கனமழை வரை பெய்யும் என்று கூறியுள்ளது.