விமான நிலையத்தில் கலாச்சார நடனத்துடன் உற்சாக வரவேற்பு
புதுடெல்லி, செப்.8–
டெல்லியில் நாளை தொடங்கும் ஜி–20 உச்சி மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் குவிந்து வருகிறார்கள். கலாச்சார நடனத்துடன் அவர்களை மத்திய அமைச்சர்கள் உற்சாகமாக வரவேற்றார்கள்.
இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கியது ஜி–20 அமைப்பு. ஜி–20 அமைப்பின் தலைமை பதவியை தற்போது இந்தியா அலங்கரித்து வருகிறது. “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்பது மாநாட்டின் முழக்கமாக உள்ளது.
ஜி–20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டங்கள் நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களாக நடைபெற்றன. சென்னை உள்பட 60 நகரங்களில் 200 கூட்டங்கள் நடத்தப்பட்டது. அந்த கூட்டங்களில் ஜி–20 நாடுகள் இடையே பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்த முடிவுகள் கருதப்படுகின்றன.
அவற்றுக்கு இறுதி வடிவம் கொடுத்து நடைமுறைப்படுத்துவதற்காக டெல்லி ஜி–20 மாநாட்டின் தலைவர்கள் பங்கேற்பு கூட்டம் நாளை தொடங்குகிறது. சனி, ஞாயிறு 2 நாட்கள் ஜி–20 உச்சி மாநாடு விவாதங்கள் நடைபெறும்.
டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் ஜி–20 மாநாட்டு கூட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்தியா தலைமை தாங்கி நடத்தும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதைப்போல உறுப்பினர் அல்லாத பல்வேறு நாடுகளும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றன.
பிரமாண்டமான இந்த ஜி–20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் தலைவர்கள் டெல்லியில் குவியத்தொடங்கி விட்டனர்.
டெல்லி வரும் வெளிநாட்டு தலைவர்களை வரவேற்க மத்திய மந்திரிகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து வெளிநாட்டு தலைவர்களை வரவேற்கிறார்கள். அதன் பிறகு வெளிநாட்டு தலைவர்கள் டெல்லியில் உள்ள பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதற்காக அழைத்து செல்லப்படுகிறார்கள்.
இதில் முதல் நபராக நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபு கடந்த 5-ந்தேதி டெல்லி வந்தார். அடுத்ததாக மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் தன் மனைவியுடன் நேற்று காலை 6.15 மணிக்கு டெல்லி வருகை தந்தார்.
மாநாடு நாளை தொடங்குவதால் பெரும்பாலான தலைவர்கள் இன்று டெல்லியை வந்தடைகிறார்கள்.
சிறப்பு கலாச்சார நடனம்
அந்த வகையில் அர்ஜென்டினா அதிபர் ஆல்பெர்டோ பெர்னாண்டஸ் இன்று காலை 6.20 மணிக்கு டெல்லி வந்தார். அவரை எஃகு மற்றும் ஊரக வளர்ச்சிக்கான இணை அமைச்சர் பக்கன் சிங் குலாஸ்தே வரவேற்றார்.
இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி காலை 8.50 மணிக்கும் டெல்லி வந்தார். அவரை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே நேரில் சென்று வரவேற்றார்.இத்தாலி பிரதமரை வரவேற்க விமான நிலைய வளாகத்தில் சிறப்பு கலாச்சார நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நடன நிகழ்ச்சியை ஜார்ஜியா மெலோனி பார்த்து ரசித்தார். பின்னர் நடன கலைஞர்களுடன் இணைந்து அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதேபோல ஆப்பிரிக்க ஒன்றிய அதிபர் அசாலி அசவுமானி காலை 10.25 மணிக்கும், தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா காலை 11.45 மணிக்கும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா பகல் 12.30 மணிக்கும் டெல்லி வந்து சேர்ந்தார்கள்.
இங்கிலாந்து நாட்டின் பிரதமரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பகல் 1.40 மணிக்கு வருகை தந்தார். ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பிற்பகல் 2.15 மணிக்கு வருகை தந்தார்.
ஜோ பைடனுக்கு
மோடி விருந்து
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று மாலை 6.55 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வேதச விமான நிலையத்தில் தரையிறங்குகிறார். இதற்காக அவர் இன்று காலை வாஷிங்டனில் இருந்து இந்தியா புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் ஜோ பைடனை மத்திய சிவில் விமான போக்கு வரத்துத்துறை இணை மந்திரி வி.கே.சிங் வரவேற்கிறார்.
ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஜி–20 உச்சி மாநாட்டில் அவரது பங்கேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜோ பைடன் வருகையை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதிக்குரிய மிகவும் பாதுகாப்பு மிகுந்த காரான ‘தி பீஸ்ட் காடில்லாக்’ காரும் டெல்லி வருகிறது. அமெரிக்காவின் போயிங் சி–17 குளோபல்மாஸ்டர்–3 என்கிற போர் விமானம் மூலம் இந்த கார் எடுத்து வரப்படுகிறது. இந்த காரிலேயே ஜோ பைடன் டெல்லியில் பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இன்று இரவு பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியா–அமெரிக்கா உறவுகளை மேலும் வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இரவு விருந்து அளிக்கவும் பிரதமர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜோபைடனை தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீன பிரதமர் லீ கியாங் ஆகியோர் வருகிறார்கள். சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு பதிலாக பிரதமர் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல்–நஹ்யான் இரவு 8 மணிக்கும், நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இரவு 8.15 மணிக்கும், பிரேசில் அதிபர் லூயிஸ் லுலா டா சில்வா இரவு 8.45 மணிக்கும், இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ இரவு 9.15 மணிக்கும், துருக்கி அதிபர் எர்டோகன் இரவு 10.15 மணிக்கும், ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் இரவு 10.45 மணிக்கும் டெல்லி வருகிறார்கள்.
இதேபோல சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், கொரிய குடியரசின் அதிபர் சுக் யீல் யூன், எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோரும் இன்று மாலை டெல்லி வருகிறார்கள்.
இவர்களைத் தொடர்ந்து இரவு 8.10 மணிக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வருகிறார். இவரை மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்கிறார்.
இதைப்போல நாளையும் சில தலைவர்கள் டெல்லி வருகின்றனர். இதில் முக்கியமாக ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் பகல் 12.35 மணிக்கும் டெல்லிக்கு வருகின்றனர்.
உலக தலைவர்களை உபசரிக்கும் விதமாக நாளை இரவு ஜி–20 விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்திற்கு சுமார் 500 தொழிலதிபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் எச்.டி தேவகவுடாவுக்கு விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருந்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். பல எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர்கள் விருந்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
பல அடுக்கு பாதுகாப்பு
ஜி–20 மாநாட்டையொட்டி புதுடெல்லி விழாகோலம் பூண்டுள்ளது. நகரமே விளக்கொளியில் ஜொலிக்கிறது. வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ராணுவ விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வானில் வட்டமடித்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மாநாடு நடைபெறும் பிரகதி மைதானம், உலக தலைவர்கள் தங்கும் ஆடம்பர விடுதிகள் போன்றவை பல அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டு உள்ளன. புதுடெல்லி மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் வாகன இயக்கத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
பெரும்பாலான அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு நேற்று முதலே விடுமுறை அறிவிக்கப்பட்டன.
இதைத்தவிர பொதுமக்களுக்கு பல்வேறு தடைகள், ஆன்லைன் வினியோகம் உள்பட வழக்கமான சேவைகள் ரத்து போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.