ரூ.19 ஆயிரம் கோடி கல்வி நிதி நிறுத்தம்:
நியூயார்க், ஏப். 22–
டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான சுமார் ரூ.19 ஆயிரம் கோடி (2.2 பில்லியன் டாலர்) நிதி உதவியை நிறுத்தியதை எதிர்த்து, இது கல்வி சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறியுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.19 ஆயிரம் கோடி (2.2 பில்லியன் டாலர்) நிதி உதவியை நிறுத்தி வைத்தார். இதை எதிர்த்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆலன் கார்பர் கூறுகையில், “நிதி உதவியை நிறுத்தியது சட்டவிரோதமானது. இது அரசாங்கத்தின் அதிகாரத்தை மீறிய செயல். எனவே, இதை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்றார். இந்த வழக்கை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மாசசூசெட்ஸ் பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அமெரிக்க அதிபரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மற்ற பல்கலைக்கழகங்களின் பெயர்களையும் இந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மேலும் கூறுகையில், “அரசாங்கம் தனது நிதி அதிகாரத்தை பயன்படுத்தி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கல்வி சார்ந்த முடிவுகளை கட்டுப்படுத்த பார்க்கிறது. இது அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு எதிரானது. மேலும், இது கூட்டாட்சி சட்டங்கள் மற்றும் விதிமுறைகளையும் மீறுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆலன் கார்பர் கூறுகையில், “எந்த அரசாங்கமும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தனியார் பல்கலைக்கழகங்கள் என்ன கற்பிக்க வேண்டும், யாரை சேர்க்க வேண்டும், யாரை வேலைக்கு அமர்த்த வேண்டும், எந்த துறையில் படிக்க வேண்டும் என்பதை எல்லாம் தீர்மானிக்கக் கூடாது” என்று கூறினார்.
இந்த வழக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கும், டிரம்ப் நிர்வாகத்திற்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரமாக்கியுள்ளது. மேலும், இது அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் சுதந்திரம் மற்றும் அரசாங்கத்தின் அதிகாரம் குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது.