செய்திகள்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரவில்லை: எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதில்

Makkal Kural Official

சென்னை, ஏப். 7–

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரவில்லை – என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில் கூறியுள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று சட்டப் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

இன்றைய தினம் நிருபர்களை சந்தித்த அண்ணா திமுக-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு ஏன் உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கேட்கிறது? உங்களுக்கு பயமா? என்று கேட்டிருக்கிறார். எங்களுக்கு மடியில் கணமும் இல்லை – வழியில் பயமும் இல்லை. எங்களது கவுன்டரை அவர் ஒழுங்காக படித்துப் பார்க்கவில்லை – எங்களது கோரிக்கையையும் அவர் பார்க்கவில்லை. இன்றைக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய வழக்குகள், மற்ற வழக்குகள், டாஸ்மாக் பொறுத்தவரைக்கும் இருக்கின்ற வழக்குகள் எல்லாம் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் எல்லா வழக்குகளையும் சேர்த்து ஒன்றாக விசாரியுங்கள் என்றுதான் நாங்கள் கேட்டிருக்கிறோமே தவிர, வேறு மாநிலத்திற்கு சென்று எங்களுடைய வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை.

உச்ச நீதிமன்றம்

விசாரிக்க வேண்டும்

ஆனால், அண்ணா திமுகவின் பொது செயலாளராக இருந்த ஜெயலலிதாதான் வழக்கை அன்றைக்கு வேறு மாநிலத்திலேயே விசாரிக்க வேண்டும் – தமிழ்நாட்டில் விசாரித்தால் சரியாக இருக்காது என்று வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று அந்த வழக்கைப் பற்றி நாங்கள் கேட்கவே இல்லை. எங்களுடைய கோரிக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பதுதான். அதை அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை. புரிதல் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்ததாக டாஸ்மாக் ரெய்டு பற்றி 2016-–21-ஆம் ஆண்டிற்கான பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், அதைத்தொடர்ந்து சிலர் சொல்லி அன்றைக்கு டாஸ்மாக்கில் திடீரென்று ரெய்டு நடத்தினார்கள். ஆனால், என்ன தொகை? எவ்வளவு என்று எதுவுமே அவர்கள் வெளியிடவில்லை. என்ன கணக்குகள் கைப்பற்றினோம்? எவ்வளவு தொகை அங்கே முறையீடு செய்யப்பட்டது என்பதெல்லாம் சொல்லவில்லை. அன்றைக்கு ஒருவர் சொன்னார் – பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆயிரம் கோடி ரூபாய் என்று சொன்னார். அதைத்தான் அடுத்து அமலாக்கத்துறை சொன்னது. அதாவது அண்ணாமலை என்ன சொன்னாரோ அதனை அமலாக்கத்துறை சொன்னது. அதற்குப் பிறகு டெல்லிக்குச் சென்று பார்த்துவிட்டு வந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதை ஆயிரம் கோடி என்றார். அதாவது அவர்களுக்கு உள்ள தொடர்பு அதன் மூலமாக தெரியுமே தவிர நிச்சயமாக எங்களுடைய ஆட்சியில் டாஸ்மாக்கில் எந்த முறைகேடும் இல்லை என்பதை எங்களால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும். எந்த தவறுக்கும் எங்களுடைய தலைவர் இடம் கொடுக்கவில்லை. முதலமைச்சரோ, அரசோ இடம் கொடுக்கவில்லை என்பதை நாங்கள் வழக்கை அவர்கள் தொடர்ந்தால் வழக்கில் நிரூபிக்க முடியும். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தான் நாங்கள் அங்கே முன் வைத்தோம் என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

ட்ரான்ஸ்பர்

பெட்டிஷன் போடவில்லை

அதனால், சட்டமன்றத்தில் டாஸ்மாக்கை பற்றி பேசவில்லை – எங்களை அனுமதிக்கவில்லை என்றெல்லாம் சொல்கிறார். நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய ஒரு வழக்கைப் பற்றி பேசக் கூடாது. உடனே அவர் சொல்கிறார் – நீங்கள் டிரான்ஸ்பர் பெட்டிஷன் போட்டு இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். நாங்கள் ட்ரான்ஸ்பர் பெட்டிஷன் போடவில்லை கவுண்டரில் தான் சொல்லி இருக்கிறோம். இது போன்று ஒரே இடத்தில் உச்ச நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளும் விசாரியுங்கள் என்று அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்னால் நம்முடைய இந்திய பிரதமர் இலங்கைக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய இலங்கை அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் அவர்கள் சொல்வது என்னவென்று சொன்னால், இந்தியாவில் நீலப் பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சிக்கு கணிசமான பங்கை வகிக்கும். எனவே, அந்த நீல பொருளாதரத்தை முன்னேற்றுவதற்காக இந்த பயணம் உறுதுணையாக இருக்கும் என்றெல்லாம் அன்று சொல்லிவிட்டு, அங்கே சென்று நம்முடைய மீனவர்களை பற்றி எந்தவிதமான பேச்சும் பேசவில்லை. கச்சத் தீவை பற்றி பேசவில்லை. அதைப்பற்றி தமிழ்நாடு முதலமைச்சர், அவர் செல்வதற்கு முன்கூட்டியே, மீனவர்கள் குறித்து பேசி அவர்களுக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று கேட்டார். அந்த தீர்வு காணப்படவில்லை.

அடுத்ததாக அங்கு இருக்கக்கூடிய நிலைமை பற்றி பார்த்தோமேயானால், பெரும்பாலான படகுகள் விடுவிக்கப்பட்டது அல்லது நம்முடைய மீனவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்று சொன்னால், அவர்கள் நீதிமன்றத்தில் சென்று வழக்கு நடத்தி, தண்டனை அனுபவித்த பிறகு திரும்பியிருக்கிறார்கள். கடந்த 2011 முதல் 2025 ஆம் ஆண்டு வரை அரசுக்கு தெரிந்த சம்பவங்களாக என்று எடுத்துக் கொண்டால், 332 சம்பவங்கள். – அதில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 3684. – கைப்பற்றப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 613 – இவைகள் எல்லாம் எங்களுக்கு கிடைத்த புள்ளி விவரங்கள். விடுதலை செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 3601. – அதாவது ஒன்றிய அரசு பேசி விடுதலை செய்தது என்பது 10 சதவிகிதம் கூட இருக்காது. – ஒரு ஆண்டு -– ஆறு மாதம் –- ஒன்றரை ஆண்டு காலம் என்று கடுங்காவல் தண்டனையை அனுபவித்துதான் அந்த மீனவர்கள் திரும்பி இருக்கிறார்கள்.

இப்போது 83 மீனவர்கள் இலங்கை சிறையில் இருக்கிறார்கள். – அதில் 11 பேர் விடுதலை செய்ய இருப்பதாக கடந்த 27ஆம் தேதி அவர்கள் சொல்லியிருக்கிறார். தமிழக அரசு தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறது. மீட்பு படகுகளை அனுப்புவதற்கு தயாராக இருக்கிறோம் என்று சொல்லியும், இன்னும் எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை. எனவே, அவர்களும் இன்றைக்கு சிறையில் இருந்து தான் வெளியே வருகிறார்கள். எனவே, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது ஒன்றிய அரசு 2016 தேர்தலுக்கு முன்பு, நாங்கள் அவர்கள் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வோம். ஒருவர் கூட கைது செய்யப்பட மாட்டார்கள் என்று சொன்னார்கள். இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் கைதுக்கு அவர்கள் காரணமாக இருந்து விட்டார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எங்களுடைய முதலமைச்சர் தமிழக அரசின் நிதியிலிருந்து ஏறக்குறைய 576 கோடி ரூபாய் அளவிற்கு இன்றைக்கு மீனவர்களின் நலன் காப்பதற்கான திட்டங்கள் – அவர்களின் மீன்பிடித் தொழில் சிறப்பதற்கான திட்டங்கள் – ஆழ்கடலில் சென்று மீன் பிடிப்பதற்கான வழிவகைகளை இன்றைக்கு சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *