செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு: சட்டசபையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

Makkal Kural Official

சென்னை, ஏப்.23-

அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் ரூ.2 ஆயிரம் தொகுப்பூதியம் உயர்வு செய்யப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

சட்டசபையில், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் செந்தில்பாலாஜி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

* போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்களை கண்டறிந்து விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குற்றப் புலனாய்வுத் துறையின் பயன்பாட்டுக்காக 50 கையடக்க வாய்வழி திரவ மருந்து சோதனை சாதனங்கள் வாங்கப்படும்.

* போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றும் 15 போலீசாருக்கு ‘தமிழ்நாடு முதலமைச்சர் காவல்துறை பதக்கம்’ என்ற சிறப்பு பதக்கம் வழங்கப்படும்.

* ஆன்லைன் போதைப் பொருட்கள் கடத்தல், ‘டார்க் நெட்’ சந்தைகள், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை எதிர்த்துப் போராட இணைய ஆய்வகம் அமைக்கப்படும்.

* தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அருந்துதல் மற்றும் போதைப் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு வருவாய்த் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து மாவட்டந்தோறும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

* தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள், ஆக மொத்தம் 23,629 மதுபான சில்லரை விற்பனைக் கடைப் பணியாளர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் 1.4.2025 (அதாவது இந்த மாதம் முதல்) முதல் மாதந்தோறும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.64.08 கோடி கூடுதல் செலவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *