மாஸ்கோ, செப். 8–
ஜி–20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், காணொளி வாயிலாகவும் கலந்து கொள்ள மாட்டார் என ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ஜி-20 நாடுகளின் 18-வது கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளின் அதிபர்கள் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் வீடியோ காணொளி வாயிலாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொள்ள எந்த ஒரு திட்டமும் இல்லை எனவும், உரை நிகழ்த்தும் திட்டமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்து கொள்ள உள்ளார்.
காங்கிரஸ் கேள்வி
இந்தியாவின் தலைமையில் நடைபெறும் ஒரு மாநாட்டில் இரு முக்கிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்காதது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் தர வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா தெரிவித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் பெரும் பொருட்செலவில் நடத்தப்படும் மாநாட்டில் 2 முக்கிய தலைவர்கள் பங்கேற்காதது ஏற்புடையதல்ல என்றும் பவன் கெரா தெரிவித்தார்.
ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குக்கு பதில் அந்நாட்டு பிரதமர்லி கியாங் பங்கேற்க உள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பதில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கை லாவ்ரோவ் பங்கேற்க உள்ளார். சிறப்பு ராணுவ நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருவதால் இந்தியா வர இயலவில்லை என பிரதமர் மோடியிடம் புதின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.