{ 60 ஆண்டு மருத்துவ சேவையில் ட்ரூபீம் கருவி ஓர் மைல்கல்: கார்த்திகா சிவப்பிரகாசம் பெருமிதம் }
ஒண்டிப்புதூர், ஏப். 9–
கோவை அவிநாசி சாலை, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள, ஜிகேஎன்எம் எனப்படும் கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவத்தில் துல்லியமான சிகிச்சை அளிக்கும் அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட ட்ரூபீம் ஹைபர்ஆர்க் லீனியர் ஆக்சிலரேட்டர் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
இதன் துவக்க விழா நிகழ்ச்சி ஜிகேஎன்எம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வாளவாடி நாராயணசாமி புற்றுநோய் சிகிச்சை மையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், ஜிகேஎன்எம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுச்சாமியுடன் இணைந்து ட்ரூபீம் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை இயந்திரத்தை மருத்துவ சேவைக்காக திறந்து வைத்தார்.

தென்னிந்தியாவில் முதன் முறையாக…
இது குறித்து செய்தியாளர்களிடம் ஜிகேஎன்எம் மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோய்யியல் துறை தலைவர் டாக்டர் கார்த்திகா சிவப்பிரகாசம் கூறுகையில், தென்னிந்தியாவில் ஜிகேஎன்எம் மருத்துவமனையில் முதன் முறையாக நிறுவப்பட்டுள்ள அமெரிக்காவின் வேரின் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த அதிநவீன ட்ரூபீம் ஹைபர்ஆர்க் லீனியர் ஆக்சிலரேட்டர் தொழில்நுட்பம் எஸ்ஜிஆர்டி என்னும் மேற்பரப்பு வழிகாட்டுதல் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
நோயாளியின் இயக்கத்தை நிகழ் நேரத்தில் கண்காணிக்கவும் சரி செய்யவும் அதிநவீன கண்காணிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது இது துல்லியமான சிகிச்சை மற்றும் நோயாளியின் வசதி இரண்டையும் உறுதி செய்கிறது.
ட்ரூபீம் இயந்திரம்
சிகிச்சை பெரும் நோயாளியின் மேற்பரப்பை தொடர்ந்து கண்காணிக்க கேமராக்கள் மற்றும் ப்ரொஜெக்டரை இந்த ட்ரூபீம் இயந்திரம் பயன்படுத்துகிறது. நோயாளியின் உடலில் புற்றுநோய் செல்கள் இருக்கும் இடத்தில் துல்லியமாக கதிர்வீச்சு சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. இதன் மூலம் ஆரோக்கியமான திசுக்களுக்கு சேதம் ஏற்படுவதை குறைக்கிறது.
நோயாளியின் சுவாசம் போன்ற சிறிய அசைவுகளுக்கு ஏற்ப இந்த அமைப்பு தானாகவே சரி செய்து சிகிச்சை முழுவதும் துல்லியமான இலக்கை அடைய உதவுகிறது.
இந்த ட்ரூபீம் தொழில்நுட்பம் ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட சிகிச்சை தேவைகளுக்கு ஏற்ப தனித்துவமாக சிகிச்சை திட்டங்களை செயல்படுத்துகிறது.
வரலாற்றில் மைல்கல்
1958ஆம் ஆண்டு முதல் ஜிகேஎன்எம் மருத்துவமனையில் இயங்கி வரும் வாளவாடி நாராயணசாமி புற்றுநோய் சிகிச்சை துறை வரலாற்றில் இந்த ட்ரூபீம் ஹைபர்ஆர்க் லீனியர் ஆக்சிலரேட்டர் தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ள தின் மூலம் ஜிகேஎன்எம் புற்றுநோய் சிகிச்சை துறை குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
இதன் மூலம் தென்னிந்தியா முழுவதும் எண்ணற்ற புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கும் மேம்பட்ட வாழ்க்கைக்கும் சிறப்பான வழியை அமைத்து தர முடியும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில், ஜிகேஎன்எம் மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறை மருத்துவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.