செய்திகள்

ஜாக்டோ-ஜியோ தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்தம்

Makkal Kural Official

சென்னை, நவ. 18–

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எழிலகத்தில் அரசு ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜாக்டோ ஜியோ என்பது தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சமூக, பொருளாதார உரிமைகளை பாதுகாப்பதற்காக உருவான ஒருங்கிணைந்த இயக்க அமைப்பாகும். இந்த அமைப்பானது ஊழியர்களின் வேலைநிலை, ஓய்வூதியம், சம்பளம் மற்றும் அரசு நலக் கோரிக்கைகள் தொடர்பாக ஒருங்கிணைந்து போராட்டங்கள் நடத்துகிறது.

அந்த வகையில் தற்போதும், பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களைதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்து இருந்தது.

ஜாக்டோ-ஜியோ மாநில மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி எப்போதெல்லாம் போராடுகிறோமோ அப்போதெல்லாம் அழைத்து பேசி ஆறுதல்படுத்துகிறார்களே தவிர, கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த பிப்ரவரி 24-ந்தேதி அமைச்சர்கள் கொண்ட குழு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதேபோல் மார்ச் 13-ந்தேதி முதல்-அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி 10 அம்ச கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசி நம்பிக்கை அளித்தார். அதன் அடிப்படையில் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாத காரணத்தினால், இன்று (18-ந்தேதி) ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க இருக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலையில் இருந்தே தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்திலி ஈடுபட்டனர். பணிகளை புறக்கணித்து, ஊழியர்கள் பதாகைகள் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தலைமைச் செயலாளர்

எச்சரிக்கை

இதற்கிடையே வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் நேற்று கடிதம் அனுப்பி இருந்தார்.

அதையும் மீறி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர். இதனால் அரசுப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *