ஸ்ரீநகர், ஏப்.20–
ஜம்மு காஷ்மீரில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜம்மு -காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டத்தில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள ஜம்பா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில், ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், அருகே இருந்த தரம்கண்ட் என்ற கிராமத்தை சூழ்ந்தது.
மேலும், நிலச்சரிவால் கிராமத்தில் இருந்த 10–க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் கிராமத்தில் இருந்த 100க்கும் மேற்பட்டோரை உயிருடன் மீட்டனர்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
ராம்பனில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த கடின நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்போம்.
தேவைப்படும் இடங்களில் உடனடி மீட்பு பணிகள் மேற்கொள்ள அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.