ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு
சிறீநகர், பிப். 17–
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 5 மணியளவில் 3.6 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கிழக்கு கட்ராவில் இருந்து கிழக்கே 97 கி.மீ. தொலைவில் நில அதிர்வு ஏற்பட்டது. அதிகாலை 5.01 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு, பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
தொடரும் நிலநடுக்கம்
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து உலக நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 6ம் தேதி துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் அந்நாடு சீர்குலைந்துள்ளது. இதில் அங்குள்ள கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கதால் ஏற்பட்ட உயிரிழப்பு இதுவரை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்பு பணி தற்போது வரை நடந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவானது. இதேபோல் நேற்று பிலிப்பைன்ஸிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவும் ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.