சில இதழ்களில் அறிவித்து நாசா நடத்திய அறிவியல் போட்டியில் வெற்றி பெற்று உலகமெங்கும் தேர்வு செய்யப்பட்ட 10 பேரில் நம் மங்களா மாமிப் பாட்டியும் ஒருவர்.
அந்த மாமி மாம்பலத்தைச் சேர்ந்தவர். ஒரு நாள் அவர்களை நாசாவிற்கு வரச்சொல்லி செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 6 மாத பிரயாணத்திற்குப் பிறகு மங்களா மாமியும் செவ்வாய் கிரகத்தில் இறக்கி விடப்பட்டார்.
அவர்களுக்கென்று ஒரு சிறிய அறை ஒதுக்கப்பட்டிருந்தது. தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உள்ளே சீதோஷ்ண நிலை தானாகவே மாறிக்கொள்ளும். ஆக்ஸிஜன் ரூமுக்கு வந்து கொண்டிருக்கும். வெளியேயும் சின்ன கேஸ் சென்டரும் இருக்கும். அங்கு போய் தேவையென்றால் ஆக்ஸிஜன் பெற்றுக் கொள்ளலாம்.
மங்களாவிற்கு மிகவும் எதிர்பார்ப்புகள் அதிகம். மிகவும் ஏமாற்றமாகவே இருந்தது. அங்கு மிகவும் வறண்ட பிரதேசமாக இருந்தது. உணவுகள் என்பது எதுவும் கிடையாது. வெறும் மாத்திரைகள் மட்டுமே. ஏதோ கொஞ்சம் பொடி வகைகள், அவல் இவற்றை வைத்துச் சாமளித்து வந்தாள். திரும்பும் ராக்கெட் வர இன்னும் ஒரு வருடம் ஆகும். எப்படி நாளைக் கழிப்பது என்று கவலை கொண்டாள்.
இந்த வறண்ட தேசம் நம் நாட்டில் எத்தனை பெண்களை திருமணம் ஆகவிடாமல் பண்ணியிருக்கிறது செவ்வாய் தோஷமென்று. இதெல்லாம் ஜோஷியக்காரனின் பம்மாத்து வேலை தான்.
செவ்வாய் செவ்வேள் முருகனின் இருப்பிடம் என்பார்களே என்று தேடினாள். கண்ணுக்கு எதுவும் தென்படவில்லை.
அவளுக்கென்று ஒரு ரோவர் என்று ஒரு வண்டியைக் கொடுத்திருந்தார்கள். அந்த வண்டி தண்ணீரில் மிதக்கும். போட் மாதிரியும் செல்லும்.வான்வெளியில் விமானம் போல் பறக்கும். தரையிலும் ஊர்ந்து செல்லும். அவளுக்கென்று ஒரு எண் கொடுத்துள்ளனர். அவளும் அந்த ரோவரை ஓட்டக் கற்றுக் கொண்டாள்.
அவளுடன் வந்தவள் ஆப்பிரிக்க அழகி எமிலி. வந்த அவளையாவது பார்க்க ஆசைப்பட்டாள்.
அப்படி ரோவரில் போகும்போது அவளின் ஆப்பிரிக்க பாடல் ஒன்று கேட்டது. அது தான் வாங்க
‘‘ஆஷா பத்துனொச்சி நாம்புதா
சாம்புலங்க ஆஷா பத்து நொச்சி நாம்புதா
நீமே பரநிலை வெத்துடா தானுகே சாம்முவங்க
ஆஷா பத்து நொச்சி நாம்புதா
தூரஷெல்லி ஜாகே மஷ்சா மானுகே
ஆஷாயே மங்கியா மானுக்கே!’’
இது எமிலியே பாடினாள்.
மங்களா பாட்டியும் அந்த வீட்டினுள் நுழைந்தாள்.
எமிலியும் மங்களாவின் மனநிலையிலேயே இருந்தாள்.
ஒரு நாளைக் கடத்துவது பெரிய கஷ்டமாக உள்ளது என்று பேசிக் கொண்டனர்.
நாம் ஏன் ரோவரில் ஏறி சுற்றிப் பார்த்து வரக்கூடாது என்று முடிவெடுத்தனர். அதையும் உடனே செயல்படுத்தினார்கள். எமிலிக்கு தன் ஊர் மக்கள் போல் தெரிந்த அந்த இடத்தில் இறங்கிக் கொண்டாள். தான் ஊர் கிளம்பும் சமயம் அங்கு வந்து சேர்ந்து கொள்கிறேன் என்றாள். சொன்னபடி செய்தும் விட்டாள். அவளுக்கு அவர் மொழி கேட்டவுடன் மிகவும் சந்தோஷப்பட்டாள்.
மங்களாப் பாட்டியும் சுற்றிச்சுற்றி வந்து வேடிக்கை பார்த்தாள். ஓரிடத்தில் ஒரு அதிசயத்தைக் கண்டாள். ஒரு மயில் போன்ற ஒரு வானஊர்தி. அதன் கீழே பார்த்தாள். அதில் பழங்காலத்து தமிழ் எழுத்து எழுதியிருந்தது. ஆனால் வாசிக்க முடியவில்லை. கொஞ்சம், பொரி மாவும், புளியும் சிதறிக் கிடந்தன. புரிந்து கொண்டாள். தமிழன் ஒருவன் இங்கு வந்திருக்கிறான் என்று.
மங்களா இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்று கண்டுபிடிக்க நினைத்தாள். இப்படியே சுற்றி வந்தபோது ஒரு இடத்தில் சாம்பார் தாளிப்பதும் அப்பளம் போன்று ஏதோ பொரிக்கும் வாசனையையும் பாட்டி உணர்ந்தாள். அந்த இடத்தில் தன் வண்டியை நிறுத்தினாள். மக்கள் ஏதோ நடமாடுவது போலும் தெரிந்தது. கால்வாய்கள் வெட்டி தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. கண்டுபிடித்து விட்டேன் என்று சந்தோஷம் தாங்காமல் குதித்தாள்.
எனினும் மக்கள் முகத்தில் ஒரு சந்தோஷம் இல்லை. கவலையும் இல்லை. மகிழ்ச்சியும் இல்லை. வருத்தமும் இல்லை. அன்பும் இல்லை, பகையுணர்வும் இல்லை. அந்த இடத்தில் மணல்வெளி மட்டுமே இருந்தது. அதில் தங்கத் துகள் அதிகமாகக் கலந்து இருந்தன. மக்கள் எதையும் பொருட்படுத்தவில்லை.
சூடும் இல்லை. குளிர்ச்சியும் இல்லை. அதனால் செருப்பு எதுவும் அணியவில்லை. மகங்களா மட்டுமே செருப்பு அணிந்திருந்தாள்.
ஒரு உணவுக்கூடம் ஏதோ தெரிந்தது. உள்ள போய் பார்த்தாள். எல்லோரும் கொழுக்கட்டை போல் ஏதோ சாப்பிட்டார்கள். உலையை நடத்தியவர்கள் ரோபோக்கள். எல்லோரும் அனாயசமாக 40, 50, சாப்பிட்டார்கள். ஆனால் முடிந்தளவு சாப்பிட்டாள். 15 கொழுக்கட்டைகளை தன் சுருக்குப் பையில் போட்டுக் கொண்டாள் பிறகு உதவு என்று.
அப்படியே ரோவரில் சுற்றி வந்தாள். நம்பமுடியாத அதிசயம் ஒன்று அவளுக்கு காத்திருந்தது. அது என்னவென்றால், புரட்சித் தலைவர் ‘‘நான் ஆணையிட்டால்’’ என்று ஒரு திரையில் ஆடிக் கொண்டிருந்தார்.
மக்களும் வேடிக்கை பார்த்தார்கள்.
ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். வாயசைவில் இருந்து பாட்டி தெரிந்து கொண்டது இது தான் காலில் ஏதோ சக்கரம் கட்டியிருப்பாரோ சுழன்று சுழன்று ஆடுகிறாரே என்பது தான் எம்.ஜி.ஆர்.’ புகழ் இவ்வளவு தூரம் பரவி உள்ளதா என்று வியந்தாள்.
சப்போட்டா, மாமரம் போன்றவற்றைக் கண்டாள். சில மாங்காய்களைப் பறித்துக் கொண்டாள். சற்று தூரம் போனதும் ஒரு கோவில் மதில்சுவர் போலக் கண்டாள். முதலில் பயந்தாலும் துணிந்து உள்ளே செல்வோம் என்று துணிந்து சென்றாள். கண்டதும் பிரமித்து விட்டாள். ஆம் ஒரு சிவலிங்கம் காட்சி அளித்தது. அதனை மரகதம், பவளம், தங்கம் இவற்றால் அலங்கரித்திருந்தனர். ஒளி கண்ணைப் பறித்தது. மங்களாவின் கைகள் வணங்கின. சுற்றி வந்தாள்.
விலை உயர்ந்த கற்கள் அவளை மலைக்க வைத்தது. திடீரென ஒரு தமிழ் குரல் கேட்டது. குழந்தாய், குழந்தாய் என்று கூப்பிட்டது. அது ஒரு ஆண் குரல் போல் இருந்தது. என் பெயர் சிவநேசன் . எனது வயது 1000 வயதுக்குமேல் இருக்கும். என் நண்பர்களுடன் ஒரு மயில் வானஊர்தியில் வந்தோம். அவர்கள் கிளம்பி விட்டார்கள். ஆனால் நான் இங்கிருந்த நிலச்சரிவில் மாட்டிக் கொண்டேன். என்னைக் காணாமல் தேடினார்கள். கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் போய் விட்டார்கள். அவர்கள் பெயர் ராஜேந்திரசோழன், வளவன் மேலும் சிவஞானம். மூவரும் கிளம்பிப் போய்விட்டனர். நான் மட்டும் இங்கே தங்கி விட்டேன்.
ஒரு ஜீவ நீர் ஊற்று நீர் திடீரென என்மேல் விழுந்தது. அது அமுதமென என் உயிரைக் காப்பாற்றிவிட்டது. அந்த ஜீவ நீர் என் மேல் பட்டதும் பசி, தாகம் எதுவும் எனக்கு ஏற்படவில்லை. என் உடல் உறுப்பும் மிகவும் வலுவுடையதாக மாறி விட்டன. ஆயிரம் ஆண்டும் ஆனாலும் உயிர் பிரியாமல் வாழ்ந்து வருகிறேன். சிவலிங்கம் மட்டும் நான் இந்த கிரகத்திற்கு வந்தபோது நானே அமைத்து. எப்போதாவது இதற்கு படையலிடுவார்கள். நான் அதை மட்டும் எடுத்துச் சாப்பிடுவேன். என் உருவம் மிகவும் கோரமாக இருக்கும். நகங்களும், பற்களும் தலைமுடியும் அதிகமாக நீண்டு வளர்ந்திருக்கும். ஆனால் இப்போது கால்கள் கற்கள் போல் மாறிவிட்டன. இங்குள்ள நீரை மட்டும் அதிகம் குடிக்காதே. உயிரே போகாது நீண்ட நாள் வாழ்வாய். அது மிகவும் கொடுமையானது. ஒரு கையளவு மட்டும் எடுத்துக் குடி நோய்கள் எல்லாம் பறந்து விடும். உன் நாட்டுக்குத் திரும்பும்போது மட்டும் சிறிது கொண்டு போ. ஒரு கரண்டி உள்ளே போனாலும் சர்க்கரை, ரத்த அழுத்தம் எல்லாம் போய்விடும். ஆனால் கொண்டுப் போவது தான் கடினம். மிகவும் கெடுபிடி அதிகம். எந்தப் பொருளும் இங்கிருந்து போக அனுமதிக்க மாட்டார்கள்.
இந்த கிரகத்தின் சட்டத்திட்டங்களும் மிகவும் கடுமையானவை. நான் எல்லாவற்றையும் விளக்கிச் சொல்கிறேன். ஆனால் வாகனத்தில் ஏறும் முன் உன் மூளையைச் சலவை செய்து விடுவார்கள். உனக்கு எதுவும் நினைவிருக்காது. இந்த சிவலிங்கத்தின் ஒளி வட்டம் விழும் வரை எதுவும் உன் சிந்தனையை சிதைக்க முடியாது. கவனமாக இரு. கூடுமானவரை இந்த லிங்கத்தின் ஒளிவட்டம் விழும்படி பார்த்துக்கொள்.
ஒளிவட்டத்தில் கொஞ்சம் கிள்ளி எடுத்தேன் . கையிலிருந்து ஒளி பரவியது.
அந்த வெளிச்சத்தில் தப்பிப் பிழைத்து ஓடி வந்து விட்டேன்.