அறிவியல் அறிவோம்
கல்லூரி மாணவர் குழுவினர் சோலார் பேனல் மரம் ஒன்றை வடிவமைத்திருக்கின்றனர். இதில் செல்போன், லேப்டாப், மின்சார வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளும்படியான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாறி வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மக்களும் மாற்றம் அடைந்து வருகின்றனர். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டைக் கூறலாம். பேட்டரி பைக், கார் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இதைப் பயன்படுத்துபவர்கள் வெளி இடங்களுக்குச் செல்லும்போது பேட்டரி தீர்ந்துவிட்டால் பெரும் இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதைத் தீர்க்க புதிய வழி ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழக மாணவர்கள் ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து சோலார் பேனல் மரத்தை வடிவமைத்திருக்கின்றனர். இது பார்ப்பதற்கு மரம் போன்று காட்சியளிக்கும். கிளைகளில் சோலார் பேனல் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் கிடைக்கும் சூரிய ஒளி சேமிக்கப்பட்டு மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் செல்போன் மற்றும் லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த சோலார் பேனல் மரத்தைக் குறைந்த இடத்திலேயே அமைத்துக் கொள்ளலாம். பகலில் நிழல் தரும் படியும், இரவில் எல்இடி லைட் மூலம் வெளிச்சத்தைக் கொடுக்கும் வசதிகள் இதன் சிறப்பு அம்சமாகப் பார்க்கப்படுகிறது. இந்த சோலார் பேனல் மரத்தை ஆங்காங்கே அமைப்பதன் மூலம் மின்சார வாகனங்களை எளிதில் சார்ஜ் செய்துகொள்ளலாம். இதை வடிவமைத்த மாணவர்கள் 20 ஆயிரம் ரூபாய் விலையில் மின்சார பைக் ஒன்றையும் தயாரித்துள்ளனர்.