செய்திகள் வாழ்வியல்

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பயோமாஸில் இருந்து எரிபொருள் தயாரிப்பு: சென்னை ஐஐடி ஆய்வு!

Makkal Kural Official

அறிவியல் அறிவோம்


சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் பயோமாஸை எரிபொருளாக மாற்றும் செயல்முறையை ஆய்வு செய்ய செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு மூலமான ஆய்வில் உருவாகும் கம்ப்யூட்டர் சிமுலேஷன், மாதிரிகள், பயோமாஸ் செயல்முறை தொடர்பான விரைவான புரிதலை அளிக்கக் கூடியதாக அமைகிறது.

பயோமாஸ், எரிசக்திக்கான வழியாக அமைகிறது.

மரம், புல் மற்றும் ஆர்கானிக் கழிவு உள்ளிட்ட பயோமாஸில் இருந்து எரிபொருளை பிரித்தெடுக்கும் ஆய்வில் உலகமெங்கும் உள்ள ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 750 மில்லியன் மெட்ரிக் டன் பயோமாஸ் உற்பத்தியாவதால், இத்தகைய தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்தப் பின்னணியில் சென்னை ஐஐடியில் கெமிக்கல் இஞ்சினீயரிங் துறை உதவி பேராசிரியர் டாக்டர்.ஹிமான்ஷு கோயல், பேராசிரியர் டாக்டர்.நிக்கட் எஸ்.கைசரே, பயோமாஸ் செயல்முறை தொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். ஆய்வு மாணவர் கிருஷ்ண கோபால் சர்மாவும் இதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இந்த ஆய்வு அடிப்படையிலான ஆய்வுக்கட்டுரை சர்வதேச வேதியல் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. “பயோமாஸ் எரிசக்தியாக மாறும் சிக்கலான செயல்முறையை புரிந்து கொள்வது, செயல்முறை வடிவமைப்பு மற்றும் இதற்கான ரியாக்டர்களை அமைப்பதில் மிகவும் உதவியாக இருக்கும்,” என்று டாக்டர். ஹிமான்ஷு கோயல் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தேவையான தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்க அடுத்த தலைமுறை பொறியாளர்களை அதிநுட்ப கணிணியாக்கம் மற்றும் இயந்திர கற்றல் மாதிரிகளில் தயார் செய்வது அவசியம். அதற்கான உதாரணமாக இது அமைகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாயோமாஸ் எரிபொருளாக மாறும் செயல்முறையை விளக்கும் மாதிரிகள் உலக அளவில் உருவாக்கப் பட்டிருந்தாலும் அவை செயல்பாட்டிற்கு வர நீண்ட காலம் ஆகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் நுட்பங்கள் இதை விரைவாக்கும் என ஐஐடி சென்னை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.“ரியாக்டரில் பயோமாஸ் இருக்கும் கால அளவிற்கு ஏற்ற செயல்முறையாக உயிரி எரிபொருள் அமைப்பை இயந்திர கற்றல் மாதிரிகள் கணிக்கின்றன. இந்த தரவுகள் பல்வேறு செயல்முறை சூழலில் பயன்படுத்தும் தன்மை கொண்டது,” என டாக்டர்.நிகேத் எஸ்.கைசர் கூறியுள்ளார்.

இந்த குழு பயோமாஸ்- எரிபொருள் தயாரிப்புக்கு மட்டும் அல்லாமல், கார்பன் சிறைபிடிப்பு மற்றும் வேதியல் துறையை மினமயமாக்குவது உள்ளிட்டவற்றிலும் சமூக நோக்கிலான தீர்வுகளுக்காக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *