செய்திகள்

சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம்: 26–ம் தேதி திறப்பு

அனைத்து கட்சிகளுக்கும் சட்டசபையில் அழைப்பு

சென்னை, பிப்.22–

சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் திறப்பு விழா வரும் 26–ம் தேதி மாலை 7 மணிக்கு திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுபற்றி சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:–

நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர்; நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர்; கலைஞருடைய நினைவிடம் அமைக்கும் பணி முழுமையடைந்திருக்கிறது. நினைவிடம் மட்டுமல்ல; கலைஞரை உருவாக்கிய, நம் தாய்த் தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டிய அண்ணாவின் நினைவிடமும் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டிருக்கிறது;

அண்ணா நினைவிடம்

அப்படிப் புதுப்பிக்கப்பட்டிருக்கக்கூடிய அண்ணாவின் நினைவிடமும், கலைஞருடைய புதிய நினைவிடமும் வருகிற 26–ம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளன என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எதற்காக இதை இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை. அதனை ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம்; முடிவெடுத்திருக்கிறோம். ஆகவே, அந்த நிகழ்ச்சியிலே இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *