செய்திகள்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்

Makkal Kural Official

சென்னை, டிச. 24–

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலரான டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:–

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நீடித்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நீடித்து பின்னர் முழுமையாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக டிசம்பர் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் தமிழ்நாட்டில் பரவாலாக மழை பெய்யும்.

2 நாட்கள் மழை

குறிப்பாக வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 25 மற்றும் 26 ஆகிய 2 நாட்கள் மிதமானது முதல் கனமழை வரையில் பரவலாக பெய்யும். கடலோர பகுதிகளில் ஒரிரு இடங்களில் மிக கனமழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு உள் மாவட்டங்களான ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி அதனை ஒட்டிய மாவட்டங்களான புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும்.

டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *