செய்திகள்

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் அம்ரித் பாரத் ரெயில் பெட்டிகள்

Makkal Kural Official

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

சென்னை , ஜன. 11–

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் அம்ரித் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரெயில் பெட்டிகளை மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அம்ரித் பாரத் ரெயிலின் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களை பார்வையிட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒவ்வொரு பெட்டியாக படுக்கைகள் மற்றும் இருக்கைகளில் ஏறியும், மின் விளக்குகள், பவர் சாக்கெட்டுகள் மற்றும் கழிவறைகள் என அனைத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:–

நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்துக்கு ரெயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.ஏழை எளிய மக்களும் வந்தே பாரத் ரெயில்களில் பயணிக்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக குறைந்த கட்டணத்தில் அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், தற்போது படுக்கை வசதி கொண்ட அம்ரித் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பெட்டிகளில் செல்போன் வைக்கும் பாக்ஸ், நவீன கழிவறை, அவசரகால அழைப்பு, உள்ளிட்ட 12 விதமான மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு ரெயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் நிறை வடைய குறைந்தபட்சம் 3 மாதங்கள் ஆகும். அந்த வகையில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 அம்ரித் ரெயில்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு நல்ல ரயில்வே திட்டங்களை வழங்குவதில் உறுதி பூண்டுள்ளார். தமிழ்நாட்டில் இடம் கையகப்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மதுரை-–தூத்துக்குடி புதிய ரெயில்

பாதை திட்டம் கைவிடப்பட்டது

தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இத்திட்டத்தை வேண்டாம் எனக் கூறி தமிழக அரசிடம் இருந்து எழுத்துபூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டது.

பாம்பன் புதிய பாலத்தில் பணிகள் நிறைவு செய்யப்பட்டு விட்டன. வெகு விரைவில் ராமேஸ்வரத்திற்கு ரெயில் பயணம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மத்திய அமைச்சர் கும்மிடிப்பூண்டியில் ரெயில் சக்கரம் தயாரிக்கும் ஆர்கேடிஆர் நிறுவனத்தில் ஆய்வு செய்தார். ஐசிஎப் பொது மேலாளர் சுப்பா ராவ் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *