சென்னை, ஜன.7–
சென்னையில் 15–ந்தேதி வரை இரவில் குளிர் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவிலும், அதிகாலையிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. அதே நேரத்தில் சில பகுதிகளில் கடந்த 2 நாட்களாக லேசான மழையும் காணப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் 15–ந்தேதி வரை இரவில் குளிர் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும் என்பதால் சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் 24–25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு–2 செ.மீ., ஊத்து, காக்காச்சி தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.