முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு
சென்னை, நவ.12-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு தனது சமூக வலைதள பதிவில் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்து கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சி பணியாளர்களே.
சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை; தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று அரசை பொதுமக்கள் வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த பணியாளர்களின் இடைவிடாத பணியே.
அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.
திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்த நான், வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். இவர்களின் மகத்தான பணி அனைவராலும் பாராட்டத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.