அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு :
சென்னை, ஏப்.26-
சென்னையில் ரூ.10 ஆயிரம் கோடியில் தைவான் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
* அமெரிக்கா, ஜெர்மனி, தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களுக்கு நேரடி வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு சேவைகள் வழங்குவதற்கு, இந்த நாடுகளில் வழிகாட்டி நிறுவனத்தின் அமர்வுகள் அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களின் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்
* திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, மாநல்லுார் மற்றும் தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காக்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 22.70 மில்லியன் லிட்டர் மூன்றாம் நிலை மறுசுழற்சி நீர் விநியோகிப்பதற்கான அமைப்பு ரூ.380 கோடியில் ஏற்படுத்தப்படும்.
* காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிள்ளைப்பாக்கம், ஒரகடம் மற்றும் வல்லம் வடகால் தொழிற்பூங்காக்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் தங்குமிட தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் 2 ஆயிரம் படுக்கைகள் கொண்ட தொழிலாளர் தங்குமிட வசதிகள் உருவாக்கப்படும்.
* தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெறும் சுமார் 1300 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில், காலக்கடன்களுக்கு பெறப்பட்டு வரும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான ஆய்வுக்கட்டணம் இந்த நிதியாண்டில் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
* தமிழ்நாட்டில் ஈர்க்கப்படும் அந்நிய நேரடி முதலீட்டில் குறிப்பாக மின்னணு மற்றும் காலணி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட தைவான் நாட்டு நிறுவனங்களுக்கு, உதிரி பாகங்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்காக சென்னைக்கு அருகில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு ஈர்ப்பதுடன் 20 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேக தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும்.
* ‘‘தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கொள்கை” மற்றும் ‘‘கடல்சார் உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் கொள்கை 2025” வெளியிடப்படும்.
* உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் தங்கள் இடத்தில் இருந்தபடியே தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து சுலபமாக முடிவுகள் எடுக்க வழிவகுத்திடும் வகையில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் குறிப்பிட்ட தொழிற்பூங்காக்கள் மற்றும் ஆயத்த தொழிற்கூடங்கள் ஆகியவற்றின் மெய்நிகர் பிரதிகள் (virtual walk-through) வழிகாட்டி நிறுவனத்தால் உருவாக்கப்படும்.
* தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மென்மேலும் முன்னெடுத்து செல்லும் விதமாக, அனைத்து சிப்காட் தொழிற்பூங்காக்களின் தோற்றப் பொலிவு உலக தரத்திற்கு இணையாக மாற்றியமைக்கப்படும்.
* கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.650 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 9 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சின்னசேலம் தாலுகாவில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
* தென்காசி மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 3 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சங்கரன்கோவில் தாலுகாவில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
* சிவகங்கை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், ரூ.200 கோடி முதலீட்டினை ஈர்ப்பதுடன், 2 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், காரைக்குடி தாலுகாவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
* வேலூர் மாவட்டத்தில், ரூ.500 கோடி முதலீட்டினை ஈர்ப்பதுடன், 5 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், காட்பாடி தாலுகாவில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
* திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.250 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 2500 புதிய வேலைவாய்ப்புகளை குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக நாட்றம்பள்ளி தாலுகாவில் சுமார் 125 ஏக்கர் பரப்பளவில் தோல் அல்லாத காலணி உற்பத்திப் பூங்கா உருவாக்கப்படும்.
* திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை ஜவுளி மற்றும் ஆடை தயாரிக்கும் தொழில் மையங்களாக உருவாக்கும் விதமாக ஜவுளி தொழில் கூட்டமைப்புகளுடன் இணைந்து இந்த மாவட்டங்களில் சிப்காட் டெக்ஸ் பார்க்ஸ் எனும் ஆயத்த தொழிற்கூட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* தஞ்சை மாவட்டத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, ராஜாமடத்தில் சுமார் 100 ஏக்கரில் கடல்சார் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி பூங்கா அமைக்கப்படும். இதனால், ரூ.200 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 2 ஆயிரம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் விதமாக மினி டைடல் பூங்கா அமைக்கப்படும். இவ்வாறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.