சென்னை, டிச. 9–
2 கொலை வழக்குகள் தொடர்பாக தேடிச்சென்ற போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி அறிவழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்,
சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த ஹரி என்கிற அறிவழகன் வயது 28. சரித்திர பதிவேடு ரவுடியான இவர் மீது தி.மு.க. பிரமுகர் இடி முரசு இளங்கோ, அவரது உறவினர் பழனி, திவாகர் ஆகியோரை கொலை செய்த வழக்குகள் உட்பட திருத்தணி, சோழவரம், ஓட்டேரி ஆகிய போலீஸ் நிலையங்களில் 12 வழக்குகள் உள்ளன.
இளங்கோ மற்றும் பழனி கொலை வழக்குகளில் கடந்த 6 ஆண்டுகளாக ஹரி தலைமறைவாக இருந்துள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
ரவுடி ஹரி தனது கூட்டாளியைச் சந்திக்க அடிக்கடி ஓட்டேரி பனந்தோப்பு பகுதிக்கு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் புளியந்தோப்பு துணை ஆணையரின் தனிப்படை, உதவி போலீஸ் ஆய்வாளர் பிரேம்குமார் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு இன்று காலை சென்றனர்.
அப்போது ஹரி அங்கு வந்த நிலையில் போலீசார் அவரை சுற்றி வளைத்த போது, திடீரென ஹரி தான் மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து உதவி போலீஸ் ஆய்வாளரை நோக்கி சுட முயன்றார். அப்போது தற்காப்புக்காக உதவி போலீஸ் ஆய்வாளர் பிரேம் குமார் துப்பாக்கியால் ஹரியின் வலது கால் முட்டிக்கு கீழ் சுட்டு மடக்கிப் பிடித்துள்ளார். காயம் அடைந்த ரவுடி அருகே உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பிறகு ரவுடி ஹரியை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், பிரபல ரவுடி தொப்பை கணேஷ் மற்றும் சேது ஆகியோரின் கூட்டாளி தான் ஹரி என்பதும் மேலும் பிரபல தாதா ரவுடியான முத்து சரவணனின் எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
கொலை செய்வது எப்படி?
மேலும் இவர்கள் ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்றால், அந்த குறிப்பிட்ட நபருடன் சாலையில் வீண் தகராறில் ஈடுபடுவார்கள். அதன் பின்னர் அவர் அசந்த நேரத்தில் கத்தியை எடுத்து கொலை செய்வது இவர்களது பாணி என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்போது இவர்களது எதிர்தரப்புகளான ரவுடி சுரேஷ் மற்றும் முருகேசன் ஆகியோரால் ஹரியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், பீகார் மாநிலத்திற்கு சென்று ரூ.35 ஆயிரத்து 500க்கு கள்ளத்துப்பாக்கியை வாங்கி வைத்துள்ளார்.
இதனிடையே ஹரி, கூட்டாளியை சென்னையில் சந்திப்பதற்காக வந்த போதுதான் போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரவுடி ஹரியிடம் ஓட்டேரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துணிச்சலாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த உதவி போலீஸ் ஆய்வாளர் பிரேம் குமாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே கடந்த 2023ம் ஆண்டு விக்கிரவாண்டியில் நடந்த திருட்டு வழக்கில் தலைமறைவான குற்றவாளி மேகநாதனை பிடிக்க பட்டப்பகலில் பிராட்வே அருகே சுமார் 2 கி.மீ. தூரம் ஓடி கைது செய்தார் பிரேம் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.