செய்திகள்

சென்னையில் மழை நிவாரண பணிகள்: உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

Makkal Kural Official

சென்னை, டிச.1–

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெஞ்சல் புயல், மழை பெய்த போதும், கால்வாய்களில் மழைநீர் தங்குதடையின்றி சென்று கொண்டிருப்பதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு உறுதி செய்தார்.

சென்னை பெருநகர மாநகராட்சி வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பெஞ்சல் புயலினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள அழைப்பு எண்ணிற்கு வரும் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள் மூலம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர், புரசைவாக்கம் தானா தெரு, டெமலஸ் சாலை பம்பிங் ஸ்டேஷன் ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். யானைக்கவுனி மேம்பாலம், வால்டாக்ஸ் சாலை கல்யாணபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இதேபோன்று தடையின்றி நீர் செல்லும் வகையில் தொடர்ந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பேசின் பாலம் அருகில் ஓட்டேரி நல்லா கால்வாயானது, பக்கிங்ஹாம் கால்வாயில் சேரும் இடத்தில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதைப் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து பெரம்பூர், முல்லை நகர், மகாகவி பாரதி நகர், மாதவரம், திருவொற்றியூர், வியாசர்பாடி, கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருப்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆர்.கே.நகர், எழில் நகர் ஆகிய பகுதிகளில் கொடுங்கையூர் கால்வாயில் மழைநீர் சீராகச் செல்வதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உணவு கூடத்தில் ஆய்வு

பின்னர் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் செயல்பட்டு வரும் மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தில் உணவு சமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதையும், புயல்மழையினால் பாதிப்புகள் ஏற்பட்டால் சீரமைப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட மரம் அறுக்கும் இயந்திர ரம்பம், ரப்பர் டியூப் மிதவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, எண்ணூரில், முதலமைச்சரின் உத்தரவின் பேரில், நீர்வளத்துறையின் சார்பில், ரூ.23.38 கோடி மதிப்பில் எண்ணூர் முகத்துவாரத்தை சீர்செய்யும் வகையில் எண்ணூர் முகத்துவாரம் அருகே உள்ள மேம்பாலம் முதல், வடசென்னை அனல் மின் நிலைய பிரதான வாயில் வரை 1,700 மீட்டர் நீளத்திற்கு, கொசஸ்தலை ஆற்றின் உப்பங்கழியை அலைபரிமாற்றம் வெள்ள தடுப்பு பணிக்காக, தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்திட நீர்வளத்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், ஆர்.டி.சேகர், இ.பரந்தாமன், கே.பி.சங்கர், துணை மேயர் மு.மகேஷ் குமார், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தாரேஸ் அகமது, நிலைக்குழுத்தலைவர் நே.சிற்றரசு, துணைச் செயலாளர் மு.பிரதாப் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *