குற்ற வழக்குகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன
சென்னை, ஏப். 25–
சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் குழுவினரின் தொடர் நடவடிக்கையால் கடந்த 8 மாதங்களில் போதைப்பொருள் கடத்தி வருதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 2,774 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகரத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கில் சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஆ.அருண், நுண்ணறிவுப் பிரிவு காவல் இணை ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் நேரடி மேற்பார்வையில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படை 5.8.2024 அன்று உருவாக்கப்பட்டது.
போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தொடங்கியதன் விளைவாக கடந்த 8 மாதங்களில் சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 1,044 போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 824 கஞ்சா வழக்குகளில் 1215.53 கிலோ கிராம் கஞ்சா, 112 மாத்திரை வழக்குகளில் 51,229 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 108 செயற்கை போதைப் பொருள் வழக்குகள் உள்ளடக்கம் ஆகும் . மேற்படி வழக்குகளில் மொத்தம் 2,774 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக பெங்களூர், மும்பை, டெல்லி ஆகிய மாநிலங்களில் பதுங்கி இருந்து சென்னையில் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த 20 நைஜீரியர்கள், 1 கேமரூன், 1 சூடான் என மொத்தம் 22 வெளிநாட்டவர்களும், வெளி மாநிலங்களான அசாம், கர்நாடகா, ஒரிசா, திரிபுரா, மும்பை மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த 8 பெண்கள் உட்பட 80 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு (2024) போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட 300 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. நடப்பு 2025ம்ஆண்டு மார்ச் மாதம் வரை 52 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் தீவிர முயற்சியால் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு சென்னை பெருநகரில் போதைப்பொருள் நடமாட்டம் முற்றிலும் ஒழிப்பதற்கான தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குற்ற வழக்குகள்
கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதே போல் சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் ஆ.அருண் உத்தரவுப்படி நுண்ணறிவுப் பிரிவில் உருவாக்கப்பட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் அவர் தம் உறவினர், நண்பர்கள் தொடர்புடைய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு, கொடுங்குற்றச் செயல்களில் தொடர்பு ஏற்படாதவண்ணம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொடுங்குற்ற நிகழ்வுகள் மேற்படி ஒருங்கிணைந்த குற்றப் பிரிவின் நடவடிக்கைகளால் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.இப்பிரிவினரால், கொடுங்குற்றத்தில் ஈடுபடவாய்ப்புள்ள 4,300 போக்கிரிகளும், 476 பெரிய குழுக்களும், 223 சிறிய குழுக்களும் கண்காணிக்கப்படுவதுடன், அவர்கள் சார்ந்த வழக்குகள் முறையாகக் கண்காணிக்கப்பட்டு, மூன்று 3ஏ வகை சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கும், 8பி வகை சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கும், 27சி வகை சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கும் என மொத்தம் 39 குற்றவாளிகளுக்கும் சார்ந்த குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றும் தரப்பட்டுள்ளது.