சென்னை, ஏப்.10–
சென்னையில் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியை காண ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதனாத்தில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
இதைத் தொடர்ந்து கிரிக்கெட் போட்டியை காண செல்லும் ரசிகர்கள் மெட்ரோ ரெயிலில் இலவமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்ந்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
ஸ்பான்சர் செய்யப்பட்ட ஐபிஎல் போட்டிக்கான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தனித்துவமான க்யூஆர் குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு பயன்படுத்தலாம். எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டள்ளது.