சென்னை, ஜூலை 28–
மடிப்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகளை கொரியர் மூலம் வாங்கி விற்பனைக்காக வைத்திருந்த மணிப்பூரைச் சேர்ந்த பெண் செய்யப்பட்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில் சென்னை பெருநகரில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு 12 காவல் மாவட்டங்களில் காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து, போதைப் பொருட்களை வைத்தருப்பவர்கள், கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர், மடிப்பாக்கம், ராம்நகர், கலைவாணர் தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அங்கு பார்சல் பெட்டியுடன் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். மேலும் அவர் வைத்திருந்த பார்சல் பெட்டியை சோதனை செய்தபோது, அதில் உடல்வலி நிவாரண மாத்திரைகளை கொரியர் மூலம் வாங்கி சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த உன்கிளியாஞ்சிங் (வயது 39) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4,800 எண்ணிக்கை கொண்ட உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
![]()





