செய்திகள்

சென்னையில் காணும் பொங்கல் அன்று 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Makkal Kural Official

சென்னை, ஜன.12–-

சென்னையில் காணும் பொங்கலையொட்டி 16-ந் தேதி 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

16-ந் தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் அன்று சென்னையில் மெரினா கடற்கரை உள்பட சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம், கூட்டமாக குவிந்து மகிழ்ச்சியில் திளைப்பார்கள் என்பதால் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காணும் பொங்கலை பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில், விரிவான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் அறிவுரையின்பேரில் 16 ஆயிரம் போலீசார், 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்காலிக காவல் கண்காணிப்பு

உயர் கோபுரங்கள்

மெரினாவில் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும். அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இவை தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.

உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்படுவார்கள். மேலும், 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

கடலில் குளிக்கத் தடை

காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள கை பட்டைகளில் குழந்தையின் முகவரி, பெற்றோரின் செல்போன் எண் எழுதி கட்டப்படும். மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படும்.

இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை. துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜிஎஸ்டி ரோடு மற்றும் இதர சாலைகளில் இருசக்கர வாகன பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

சாலை பாதுகாப்பு

விழிப்புணர்வு

காணும் பொங்கலன்று சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஒட்டிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள்.

சென்னை பெருநகர காவல்துறையின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *