செய்திகள்

சென்னையில் ஒரு மணி நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு

Makkal Kural Official

விமானத்தில் தப்ப முயன்ற வட மாநில கொள்ளையர்கள் இருவர் கைது

சென்னை, மார்ச் 25–

சென்னையில் இன்று காலை ஒரு மணி நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் 2 பேரை விமானத்துக்குள் சென்று போலீசார் கைது செய்யப்பட்டனர்.

திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. திருவான்மியூர் இந்திரா நகரில் வேலைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். அதே பகுதியில் உள்ள சாஸ்திரி நகரிலும் செயின் பறிப்பு நடந்துள்ளது. கிண்டி மைதானத்தில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகை, சைதாப்பேட்டையில் பெண்ணிடம் 1 சவரன், வேளச்சேரி, பள்ளிக்கரணையிலும் தலா ஒரு பெண்ணிடமும் நகை பறிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரத்தில் நடந்த 7 செயின் பறிப்பு சம்பவங்களில் 26 சவரன் நகைகள் பறிபோய் உள்ளன. அனைத்து சம்பவங்களிலும் பைக்கில் வந்த 2 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முகமுடி அணிந்து வந்துள்ளனர்.

பள்ளிக்கரணையில் இருந்து அடையாறு, வேளச்சேரி பகுதிகளில் சில மணி நேரத்தில் இந்த குற்றச் செயல்கள் அனைத்தும் அரங்கேறி இருப்பது அப்பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சியில் தெரியவந்தது.

நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் மும்பை செல்லும் விமானத்தில் தப்பி செல்ல முயன்றதும் விமானத்துக்குள் சென்று போலீசார் அவர்களை கைது செய்தனர்.

கொள்ளையர்கள்

பிடிபட்டது எப்படி?

தாம்பரத்தில் கடந்த பொங்கல் தினத்தன்று பல்வேறு இடங்களில் நகைப் பறிப்பில் ஈடுபட்டுவிட்டு விமானத்தில் தப்பிய உத்தரபிரதேச கொள்ளையர்கள்தான் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்

.முந்தைய பாணியிலேயே தற்போதும் அடையாறு காவல் எல்லைக்கு உள்பட்டப் பகுதிகளில் நகைப் பறிப்பில் ஈடுபட்டுவிட்டு விமானத்தில் தப்பிச் செல்வார்கள் என்று போலீசார் மிகச் சரியாக கணித்ததால், சென்னை விமான நிலையத்துக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.முந்தைய விசாரணையில் கிடைத்த தகவலால் விமான நிலையத்தை கண்காணித்த போலீசாருக்கு கைமேல் பலன் கிடைத்தது. மும்பை செல்லும் இண்டிகோ விமானத்தில் 2 பேரும் தப்பிச் செல்ல முற்பட்டனர். அவர்களை சினிமா பாணயில் விமானத்துக்குள் புகுந்து போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.கைதான இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

நகைப் பறிப்பால் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை ஒரு மணி நேரத்தில் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். பணத்தைப் பற்றி கவலைப்படாமல் விமான டிக்கெட் முன்பதிவு செய்துகொண்டு வந்து கொள்ளையடித்துவிட்டு உடனடியாக ஊர் திரும்பிவந்ததும் தெரிய வந்தது. இவர்கள் இதுபோல வேறு மாநிலங்கள் அல்லது நகரங்களுக்கும் சென்று வந்துள்ளனரா, இவர்கள் இருவர் மட்டும்தானா, பெரிய கொள்ளை கும்பல் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *