மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்பந்தம்
சென்னை, ஜன.24-–
சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தை நாள்தோறும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். சென்டிரல் ரெயில் நிலையமும் அருகில் இருப்பதால் ரெயில் பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சென்டிரல் ரெயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையம் இடைப்பட்ட சென்டிரல் சதுக்கம் பகுதியில் 27 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடத்தை கட்டுவதற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டு வந்தது. கடந்த 5 ஆண்டுகளாகவே இந்த திட்டம் ஆலோசனையில் இருந்து வந்தது.
இந்த நிலையில், சென்டிரல் சதுக்கம் பகுதியில் 27 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தம் ரெனாடஸ் பிராஜெக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வழங்கியுள்ளது. சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்தில் நேற்று இதற்கான நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.ஏ.சித்திக் முன்னிலையில் சென்ட்ரல் கோபுரத்தின் மேம்பாட்டிற்கான கட்டுமானம், கட்டிடக்கலை, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் போன்ற பணிகளின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் போன்ற பணிகளுக்கு ரூ.349 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் தி.அர்ச்சுனன் மற்றும் ரிணாடஷ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.மனோஜ் பூசப்பன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர்கள் ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மற்றும் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ஜி.தணிகைசெல்வன் (திட்ட மேலாளர்), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.