புதுடெல்லி, ஆக. 8–
செந்தில் பாலாஜி வழக்கை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் முடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அரசு வேலை வாங்கி தருவாதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கை தமிழகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசும் விசாரணையை நடத்தி வருகிறது. இந்த வழக்கை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது. இந்த நிலையில், வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் கோரி குற்றப்பிரிவு போலீசார் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விக்ரம் நாத், அஸானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கால அவகாசம் வழங்க மனுதாரர்கள் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், 6 மாத அவகாசம் கோரியதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழ்நாடு டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தது.
இது தொடர்பாக விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அரை மணி நேரம் அவகாசம் வழங்கியது சுப்ரீம் கோர்ட். இதைத்தொடர்ந்து ஒட்டு மொத்த விசாரணையை 2 மாதங்களுக்குள் நாங்கள் நடத்தி முடிக்கிறோம் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.
அப்போது வழக்கு தொடர்பாக இன்னும் எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் என்பதை அவர்களே (டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர்) இந்த விவாகாரத்தில் நேரில் வந்து கேட்கட்டும் என்றும், 6 மாத அவகாசம் எல்லாம் வழங்க முடியாது. குறைந்தபட்ச கால அவகாசம் மட்டுமே வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 30-–ந் தேதிக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தவறினால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
உரிய காரணங்களை தெரிவித்தால் கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் ஆஜராகும் உத்தரவை திரும்பப் பெறுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.