“இவங்கள வச்சு வேலை வாங்குறத விட பேசாம இந்தக் கம்பெனிய இழுத்து மூடிட்டு போறது நல்லது போல, ஒருத்தனும் வேலை செய்ய மாட்டேங்கிறானுக. குறிப்பிட்ட நேரத்துக்கு சரக்கு போய் சேரலன்னு பொருள் வாங்குறவன் நம்மள திட்டுறாங்க. இவனுங்கள எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறானுங்களே? காலையில லேட்டா வரானுங்க .சாயங்காலம் சீக்கிரமா போயிர்றானுக “
என்று ரொம்பவே வருத்தப்பட்டார், நிறுவன முதலாளி.
” சார் , அப்படி எல்லாம் நீங்க வருத்தப்பட்டு முடிவு எடுத்திராதிங்க “
என்று அந்த நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர் தயாளன் சொல்ல
” எப்படிங்க வருத்தப்படாம இருக்க முடியும். இங்க நடக்கிறத நீங்க பார்த்துட்டு தானே இருக்கீங்க? எவனாவது இங்க ஒழுங்கா வேலை செய்றானான்னு பாருங்க . இஷ்டத்துக்கு வாரானுக . இஷ்டத்துக்கு போறானுக. என் முன்னாடியே மணிக்கணக்கா செல்பாேன்ல பேசுறானுக. முதலாளிங்கிற மரியாதைய எனக்கு கொஞ்சமும் தர மாட்டேங்கிறானுக. இவனுகள கூண்டோட அனுப்பிட்டு, வேற புதுசா ஆள் எடுக்கலாமான்னு யாேசிச்சிட்டு இருக்கேன். இவனுகள வச்சுக் காலம் தள்ளுறது ரொம்ப கடிசு “
என்று இன்னும் கொஞ்சம் மூர்க்கமாகப் பேசினார் முதலாளி
” சார், நானும் கவனிச்சிட்டுத் தான் இருக்கேன். நீங்க சொல்ற எல்லாமே இங்க நடந்திட்டு தான் இருக்கு. எல்லாமே எனக்கும் தெரியுது சார். ஆனா, உங்களுக்கு வியாபாரம் நல்லபடியா நடக்கணும். நிறுவனத்த முன்னுக்கு கொண்டு வரணும் அப்பிடிங்கிற ஆசை இருக்கு. ஆனா, அந்த ட்ரிக் உங்களுக்கு தெரியல சார் “
என்று முதலாளியைத் திருப்பினார், தயாளன்.
“என்ன , எனக்கு வியாபார நுணுக்கம் தெரியலையா? எனக்கு எல்லாமே தெரியும். அவ்வளவும் தெரிஞ்சதுனால தான், இன்னைக்கு இந்த நிறுவனத்தாேட முதலாளியா இருக்கேன். நீங்க என்ன புதுசா எனக்கு சொல்லித் தாரீங்களா தயாளன் ? “
என்று தயாளனைப் பார்த்து முகம் சுளித்தார் முதலாளி
“சார், நம்ம நிறுவனத்தில எத்தனை பேர் வேலை பாக்கிறாங்க?” என்று தயாளன் கேட்க,
” என்ன ஒரு முன்னூறு பேருக்கு மேல இருப்பாங்களா?”
” எஸ் சார். இந்த முன்னூறு பேர்ல எத்தனை பேர் ஆம்பளைங்க . எத்தனை பேர் பொம்பளைங்க “
என்று தயாளன் கேட்க, அவரை ஒரு மாதிரியாகப் பார்த்த முதலாளி
” முக்கால்வாசிப் பேரு ஆம்பளைங்க . கால்வாசிப் பேரு பொம்பளைங்க “
” ம் . ஓகே சார். இந்த நிறுவனம் ஓஹோன்னு வளரணும். அவ்வளவு தானே?”
தயாளன் கேட்க,
” ஆமா” என்று தலையாட்டினார் முதலாளி.
“என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. அத நீங்க செய்ய முடியுமா? “
” சரி, எதா இருந்தாலும் நல்லா இருந்தா நான் சரின்னு சொல்லுவேன். இல்ல வேண்டாம்னு சொல்லிடுவேன். நீங்க வருத்தப்படக் கூடாது”
என்று முதலாளி சொல்ல
” எல்லாம் நல்ல விஷயம் தான் சார். இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை காலைல எவனும் ஆபீஸ்க்கு சீக்கிரம் வர்றதில்ல. சாயங்காலம் சீக்கிரமா ஓடிறானுக. இதுதான சார் உங்க பிரச்சினை.
” ஆமா . அது மட்டுமில்ல. எல்லாம் சோம்பேறியா வேல செஞ்சிட்டு இருக்கானுக. நேரத்துக்கு எந்தப் பொருளும் போய் சேர்றது இல்ல. இதுக்கு ஒரு நல்ல வழி இருந்தா சொல்லுங்க”
என்று முதலாளி கேட்டதும் சிரித்த தயாளன், எதுவும் பேசவில்லை
அடுத்த ஒரு வாரத்திற்கு எல்லாம் அந்த நிறுவனம் படு பிஸியாக இயங்கிக் கொண்டிருந்தது . எல்லாம் குறித்த நேரத்திற்கு முன்னே அலுவலகம் வந்து குவிந்தார்கள்.
இதைப் பார்த்து அசந்து போன முதலாளி தயாளனைப் பார்த்து.
” எப்படிங்க ,உங்களால இது முடிஞ்சது? ரொம்ப பெரிய விஷயமா இருக்கே ? இவ்வளவு நாள் எனக்கு இது தெரியாமயே போச்சே ? “
என்று முதலாளி மகிழ்ச்சி கலந்து சொல்ல
“சார் , இந்தக் காலத்து மனுஷனுக எல்லாம் எப்படிப்பட்டவனுகன்னு தெரியுமா ? பேச்சு ஒன்னு. செயல் ஒன்னு .வெளியே சுத்தம் பேசுவான் உள்ள கழிசடையா இருப்பான். ஒழுங்கு பேசுவான்… அசிங்கம் பண்ணுவான். இவனுங்கள மாதிரி ஆளுகள எல்லாம் நாம இழுத்துப் பிடிக்கிறது ரொம்ப கஷ்டம். உங்களுக்கு விதிமுறைகள் தான் தெரியும் .எனக்கு வழிகாட்டுதல் தெரியும் சார். அதனால தான் இத செஞ்சேன்”
என்று தயாளன் சொல்ல
“ஆமாங்க பத்து மணி ஆபிசுக்கு காலைல எட்டு மணிக்கே வந்து உட்கார்ந்திருக்கிறானுங்களே? இது எப்படி? “
” அதுதான் சார் பலவீனம். ஒவ்வொரு மனுஷனுக்கும் பலம், பலவீனம்ன்னு ரெண்டு இருக்கு .பலவீனமான விஷயத்த தட்டுனோம்னா எல்லாம் விழுந்திருவானுங்க. ஏன்னா நீங்க மனுசங்க , எப்படின்னு புத்தகத்துல மட்டும் தான் வாசிக்கிறீங்க. நான் அவங்க கூடவே பழகுறதுனால தான் ஒவ்வொரு மனுஷனுடைய எண்ணமும் செயலும் எனக்கு நல்லாவே தெரியுது”
என்று தயாளன் சொல்ல தயாளனுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பரிசாக வழங்கினார் .
“எனக்கு வேண்டாம் சார் . எனக்கு வேண்டாம் சார் “
என்று தயாளன் மறுக்க
” இல்ல…. இல்ல… எல்லாம் உங்களால வந்தது. முன்னாடி எல்லாம் பதினோரு மணிக்கு வர்ற ஆளுக, காலைல ஏழு மணிக்கே வந்துடுறாங்க. நைட்டு பத்து மணி ஆனாலும் கூட போகமாட்டேங்கிறானுக .இந்த மாதிரியான விஷயத்தை சொன்ன உங்களுக்கு ஐம்பதாயிரம் என்ன? அஞ்சு லட்சம் கூட கொடுக்கலாம் தயாளன் “
என்று சொன்னார், முதலாளி.
மாலை ஆறு மணிக்கெல்லாம் போக வேண்டிய சரக்குகள் இப்போது மூன்று மணிக்கே பார்சல் கட்டப்பட்டது.
” இது எப்படிங்க சாத்தியம் ? “
என்று அங்கிருந்த ஊழியர்களுக்கு எல்லாம் விளங்காமல் இருந்தது
” அட இதுதான் விஷயமா? தயாளன் பயங்கரமான ஆளாச்சே? அவரு செஞ்ச எல்லாம் கரெக்டா தான் இருக்கும் . எப்படிக் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு பாருங்க.இதுதாங்க வேணும். அப்பதான் மனுசங்க சிறப்பாக வேலை செய்வாங்க “
என்று அந்த நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சியாகச் சொல்லிக் கொண்டும் கொஞ்சங் கூட சலிக்காமல் வேலை செய்து கொண்டும் இருந்தார்கள். அவர்களைச் சுற்றி இளம் பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அந்த இளம் பெண்களை பார்ப்பதும் சிரிப்பதும் ,அவர்களுடன் உணவு அருந்துவதும் கேப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களுக்கு அறிவுரை சொல்வதுமாக இருந்தார்கள் அந்த நிறுவன ஊழியர்கள்
” மதுவுக்கும் மாதுவுக்கும் மயங்காத மனுசங்க கிடையாது. இன்னைக்கு பாருங்க நம்ம நிறுவன ஓஹோன்னு போயிட்டு இருக்கு “
என்றான் இன்னொரு ஊழியன்
“ஆமா பிறகு என்ன? வயசானதுக. வடிவம் இல்லாததுக. அழகு இல்லாததுகள ஆபீஸ்ல வச்சா எவங்க வேலைக்கு வருவான். ஓடிசலா ராஸ்மிகா மந்தனா மாதிரி அழகா இருக்கிற பெண்களைப் போட்டா தானே கண்ணுக்கு குளிர்ச்சியா பாக்குறதுக்கு வளர்ச்சியா இருக்கும். தயாளன் தான் கரெக்டா அவனுக பலவீனத்த தட்டுனான். இப்ப நிறுவனத்துக்கு நல்ல பேர் மட்டும் இல்ல. நல்ல பணம் சம்பாதிக்கிறோம்” என்று இன்னொரு ஊழியர் சொல்ல, மகிழ்ச்சி ஏற்பட்டது முதலாளிக்கு
அத்தர் வாசமும் சாமந்திப் பூ, மல்லிப் பூ வாசமும் சூடிய பெண்களின் மணம் அந்த நிறுவனம் முழுவதும் பரவி கிடந்தது .அந்த மயக்கத்தில் விழுந்து கிடந்த ஊழியர்கள், காலை ஆறு மணிக்கு அலுவலகம் வரலாமா? .என்று யோசனை கேட்டார்கள்.
அடிக்கடி இந்த நிறுவனத்திற்கு வந்து செல்லும் இன்னொரு முதலாளி, தன் நிறுவனம் வளர்ச்சியடையவில்லை தன் ஊழியர்கள் தன்னை எதிர்த்துப் பேசுகிறார்கள். யாரும் நிறுவனத்திற்காக செயல்படவில்லை என்று ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். அவரை அழைத்த தயாளன் ,அவர் காதில் ஏதோ ஓதினார்.
” தம்பி தயாளா , நீங்க எங்கேயோ போயிட்டீங்க. நம்ம நிறுவனத்துக்கு தேவையான பெண் ஊழியர்களை நீங்களே செலக்ட் பண்ணுங்க. என் கம்பெனிக்கும் சேர்த்து நீங்க வேலை பார்க்கலாம். நீங்க இங்கயும் சம்பளம் வாங்கலாம். அங்கேயும் சம்பளம் வாங்கலாம் “
என்று தயாளனைக் கட்டித் தழுவினார் வேறொரு நிறுவனத்தின் முதலாளி.